International
oi-Shyamsundar I
பெய்ஜிங்: நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம், அங்குள்ள கிராமங்கள், சாலைகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை அடித்துச் சென்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் நேபாள வெள்ளத்தில் பலியாகி உள்ளனர்.
நேபாளத்திலும், திபெத்திலும் ஏற்பட்ட இந்த வெள்ளத்திற்கு காரணம் சீனாதான் என்ற புகார் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், இந்த வெள்ளத்தின் தீவிரத்தையும் பேரழிவையும் காட்டும் வகையில் திபெத் மக்கள் இணையத்தில் பதிவிட்ட வீடியோக்களை, அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு சமூக வலைதளங்களிலிருந்து அதிரடியாக நீக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

திபெத்தில் காணாமல் போகும் காட்சிகள்
திபெத்தின் முக்கிய வணிக மையமான கியிரோங் துறைமுகத்தை பயங்கர சேற்று வெள்ளம் மூழ்கடிக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே சீன சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட்டதாக தி நியூயார்க் டைம்ஸ் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாள அரசு மீட்பு நடவடிக்கைகள், மரணங்கள் மற்றும் தற்போதைய கள நிலவரங்களைத் தொடர்ந்து வெளிப்படையாக அறிவித்து வருகிறது. ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக களத்தில் இருந்து தகவல்களைத் தருகின்றனர். ஆனால், சீனாவின் எல்லைக்குள் இருந்து தகவல்கள் எதுவும் வெளிவராமல், அரசு ஊடகங்களின் செய்தி அறிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இமாலய பனிப்பாறை வெடிப்பு
நேபாள-திபெத் எல்லையோர மலைப்பகுதியில் உள்ள லெண்டே கோலா நதிப்படுகையில் நிகழ்ந்த கடுமையான பனிப்பாறை சரிவு மற்றும் நிலச்சரிவே இந்த திடீர் வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. பாறைகளும் பனிக்கட்டிகளும் நொறுங்கி விழுந்த வேகத்தில், திரிசூலி மற்றும் போதே கோஷி நதிகளில் பிரம்மாண்ட வெள்ளப் பெருக்கு உருவானது. அதே சமயம் சீனா அங்கே அதிக அளவில் கட்டி உள்ள அணைகளும் இந்த வெள்ளத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கியிரோங் பகுதியில் மட்டும் குறைந்தது 558 பேர் மாயமாகி உள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அங்குள்ள எந்தெந்த கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன என்பது குறித்த துல்லிய விவரங்களை சீனா இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.
சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்
மறுபுறம், இந்த வெள்ளப் பெருக்கில் கைலாஷ் யாத்திரை மற்றும் சுற்றுலா சென்ற சுமார் 320-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், திபெத் எல்லைப் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. சிக்கியுள்ள மக்களை மீட்க நேபாள அரசுக்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இந்தியா முழுவீச்சில் வழங்கி வருகிறது.
கொரோனா கால தணிக்கை மீண்டும் தொடர்கிறது?
சீனாவின் இந்த தகவல் தணிக்கையை சர்வதேச நிபுணர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புவிசார் அரசியல் ஆய்வாளர் அதில் ப்ரார் கூறுகையில், “நேபாளப் பகுதி வெள்ளக் காட்சிகள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும் நிலையில், சீன எல்லைக்குள் இருக்கும் கியிரோங் துறைமுக வீடியோக்களை அந்நாட்டு அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் சீனா இதே போன்ற கடுமையான தகவல் தணிக்கையைக் கையாண்டதை நினைவுகூர்ந்துள்ளார். பேரழிவு ஏற்படும் காலங்களில் உண்மையான தகவல்கள் வெளிவராமல் தடுப்பது, மீட்பு பணிகளையும் மக்களின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கும் அபாயம் கொண்டது என்று அவர் எச்சரித்துள்ளார்.
இது வெறும் இணையதள தணிக்கை பிரச்சனை மட்டுமல்ல; மக்களின் உயிரோடு தொடர்புடைய மனிதாபிமான சிக்கல் என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன.
அதே சமயம் சீனாவில் அமைக்கப்பட்ட அணை கட்டமைப்புகளே வெள்ளத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை அந்நாட்டு தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது நேபாளப் பகுதியில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் என்றும், தங்கள் நாட்டு மீட்புப் படையினரும் ராணுவ ஹெலிகாப்டர்களும் துரிதமாகக் களமிறக்கப்பட்டு நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.


