கோத்தா திங்கி:
ஜோகூர், சுங்கை ரெங்கிட் – கோத்தா திங்கி சாலையின் KM68-இல் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 36 வயது மலேசிய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று (ஆகஸ்ட் 28) பிற்பகல் 1.50 மணியளவில் நடைபெற்றதாகக் கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சுப்ரண்டண்ட் யூசோப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.
36 வயது நபர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்ப்புறப் பாதைக்குச் சென்று எதிர்ப் திசையில் வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் தீவிரக் காயமடைந்த அந்த 36 வயது ஓட்டுநர், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினரால் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டார்.
எதிர் திசையில் காரை ஓட்டி வந்த 50 வயதுடைய மலேசியருக்குக் கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கோத்தா திங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனையின் தடவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வீதிப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்விபத்தைக் நேரில் கண்டவர்கள் அல்லது இது குறித்துத் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகக் கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவுக்கோ அல்லது அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



