இந்தியாவுக்கு கிடைத்த புதிய ஜிசிசி பவர்.. 10000 பேருக்கு இந்த ஒரு பிரிவில் மட்டும் வேலை ரெடி..!
இந்தியாவில் இதுவரையில் ஜிசிசி என்றால் டெக் மற்றும் ஐடி சேவை துறையை சேர்ந்த நிறுவனங்களாக மட்டுமே இருந்த நிலை மாறி தற்போது செமிகண்டக்டர் துறையில் பல ஜிசிசி நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், டேட்டா சென்டர்களின் தேவையும் உலகளவில் செமிகண்டக்டர் சிப்களுக்கான தேவையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
இதன் எதிரொலியாக, இந்தியாவில் இயங்கி வரும் செமிகண்டக்டர் ஜிசிசி நிறுவனங்கள் (GCC – Global Capability Centres) இந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுக்குறித்து இத்துறையின் முக்கிய அமைப்பான EIIR Trend நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாரீக் ஜெயின் முக்கிய தகவல்களை கொடுத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள செமிகண்டக்டர் ஜிசிசி மையங்கள் நடப்பாண்டில் மட்டும் 8,000 முதல் 10,000 வரையிலான புதிய ஊழியர்களைப் பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளன. இதன் மூலம் செமிகண்டக்டர் ஜிசிசி துறையில் பணிபுரியும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 80,000 என்ற புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக உருவாகவுள்ள இந்த 10000 வேலைவாய்ப்புகளில் பெரும்பகுதி ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வரும் ஜிசிசி மையங்களின் விரிவாக்கத்தின் மூலமே உருவாக உள்ளது. மீதமுள்ள 20 சதவீதம் வேலைவாய்ப்புகள் புதிதாக இந்தியாவில் அலுவலகத்தை துவங்கும் நிறுவனங்கள் வாயிலாக உருவாகும் என தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும், அனைத்து பிரிவுகளிலும் பயன்படுத்த துவங்கியிருக்கும் வேளையில் இதற்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை இயக்க ஏஐ மாடல் எந்தளவுக்கு முக்கியமோ அதேபோல் அதற்கான வன்பொருள் கட்டமைப்பும் முக்கியம். ஏஐ தொழில்நுட்பம் வேமாக இயங்க அதிநவீன சிப் அடிப்படை.
எனவே இத்துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இது பொற்காலமாக இருக்கும் காரணத்தால் உலகம் முழுவதிலும் உள்ள திறன்மைகளை பயன்படுத்திக்கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. இதனாலேயே ஜிசிசி அலுவலக விரிவாக்கத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது.

