International
oi-Nantha Kumar R
காத்மாண்ட்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 270 பேர் வரை பலியாகி உள்ள நிலையில் கரை ஒதுங்கும் உடல்களில் இருக்கும் தங்கநகைகளை அங்குள்ள ஒரு தரப்பினர் திருடி செல்வதாக சமூக வலைதளத்தில் வீடியோ பரவி வருகிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்து உறவினர்கள் தவித்து வரும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

நேபாளத்தில் நேற்று பெருவெள்ளம் ஏற்பட்டது. நேபாளம் – திபெத் எல்லையில் ஓடும் போட்டிகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மொத்த நேபாளமும் உருக்குலைந்துள்ளது. நேபாளத்தில் இருக்கும் நுவாகோட், தாடிங்க், ரசுவா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
கைலாய யாத்திரைக்கு சென்ற உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள், நீர்மின் திட்ட பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தற்போது வரை நேபாள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. இதனை நேபாளம் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இதுதவிர 288 இந்தியர்கள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு குழுவில் 37 பேர், 2வது குழுவில் 49 பேர், மேற்கு வங்க குழுவை சேர்ந்த 32 பேர் மாயமாகி உள்ளனர். மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
இதுதவிர இன்னும் 500க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே தான் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் கலங்க வைக்கிறது.
அந்த வீடியோவில் வெள்ளம் பாதித்த பகுதியில் தண்ணீருக்குள் பெண் ஒருவர் இறந்து கிடக்கிறார். அப்போது 2 பேர் அந்த பெண்ணின் முடியை பிடித்து கரைக்கு இழுத்து வந்து உடலில் உள்ள தங்கநகைகளை கழற்றி எடுத்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனை சுற்றிலும் நிறைய பேர் வேடிக்கை பார்க்கின்றனர்.
இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. ஆனால் நேபாளத்தில் வெள்ளம் பாதித்த பகுதியில் இப்படியான செயல்கள் நடப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதனை பார்க்கும் நெட்டிசன்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அந்த நாட்டின் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி ”இறந்த பெண்ணின் உடலை மீட்காமல் நகையை மட்டுமே எடுத்து செல்வது மனித தன்மையற்ற செயல்” என்றும், ”நான் கூட பெண்ணின் உடலை தான் அவர்கள் மீட்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்படியான திருட்டை எதிர்பார்க்கவில்லை” என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

