International
oi-Vishnupriya R
காத்மாண்டு: நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாயமானதாக சொல்லப்படும் தமிழர்கள் கடைசியாக எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும் உறவினர்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.
வடக்கு நேபாளத்தில் கோஷி ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக திடீர் காட்டாற்று வெள்ளம் நேற்று ஏற்பட்டது. இந்த துயரச் சம்பவத்தில் இதுவரை 270 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் சாலைகள், மின்சாரக் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள், தனியார் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளப்பெருக்கில் சிக்கியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு இருக்கிறது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை எப்படி மீட்பது என்பது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். மேலும் நேபாளத்திற்கு செல்லுமாறு ஆஷிஷ் குமார் ஐஏஎஸ்ஸுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் கடந்த 14 ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளம் பயணம் மேற்கொண்டனர்.
யாத்திரையை முடித்துவிட்டு தாயகம் திரும்ப வேண்டிய அவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சில தமிழர்கள் கடைசியாக எடுத்த புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் நிலை தெரியாமல் அவர்களது உறவினர்கள் பரிதவித்து வருகிறார்கள்.


