தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியாழக்கிழமை (27) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளுக்குச் சென்று மகா நாயக்க மற்றும் அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றதுடன், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மல்வத்து தரப்பின் அனுநாயக அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்த ஜனாதிபதி, அவரிடம் ஆசி பெற்றதுடன், கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய வராகொட ஸ்ரீ ஞானரதன மகா நாயக்க தேரரைச் சந்தித்து, அவரது நலன்களை விசாரித்ததுடன், அவருடனும் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்புகளில் மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ஷ சுரங்கவும் கலந்துகொண்டார்.









