International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில், மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த திடீர் வெள்ளத்தை தொடர்ந்து, அங்கு மீண்டும் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காத்மாண்டுவில் இயங்கி வரும் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

நேபாள-சீன எல்லைக்கு அருகே.. ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு ஒன்று இன்னும் நீங்காமல் இருக்கிறது. பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் இந்த அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இது திடீரென உடைந்தால்.. ஆற்றில் இரண்டாவது முறையாக பெரும் வெள்ளம் ஏற்படும். இதனால் போட் கோசி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே முதல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 157 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கானோரின் நிலை என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. காணாமல் போனவர்களில் தமிழர்களும் அடங்குவர். தற்போது இரண்டாவது வெள்ள அபாயம் இருப்பதால், சீன எல்லையில் உள்ள ஜலாங் துறைமுகப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நுவாகோட், தாடிங் போன்ற கீழ் நிலை மாவட்டங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
காலநிலை மாற்றத்தின் காரணமாக இமயமலை பகுதிகளில் இத்தகைய திடீர் வெள்ளப்பெருக்குகள் மற்றும் பனிச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்திருக்கின்றனர். நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையே எல்லை தாண்டிய முன்னெச்சரிக்கை அமைப்புகள் இல்லாதது இத்தகைய பேரிடர் காலங்களில் பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இப்போதுதான் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

