இரத்தத்தில் சைலிட்டாலின் அளவு மிக அதிகமாக உள்ளவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது முன்கூட்டிய மரணம் ஏற்படும் அபாயம், குறைந்த அளவில் உள்ளவர்களைக் காட்டிலும் கணிசமாக அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சர்க்கரையற்ற பபுள்கம் (chewing gum) மற்றும் புதினா மிட்டாய்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சைலிட்டால் (Xylitol) எனப்படும் இனிப்பூட்டியை அதிகளவில் உட்கொள்வது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 57 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஜெர்மனியின் பெர்லினில் உள்ள சாரிடே பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த (Charité University Hospital) ஆராய்ச்சியாளர்கள், 17,710 நபர்களின் தரவுகளைக் கொண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இரத்தத்தில் சைலிட்டாலின் அளவு மிக அதிகமாக உள்ளவர்களுக்கு, மாரடைப்பு, பக்கவாதம் அல்லது முன்கூட்டிய மரணம் ஏற்படும் அபாயம், குறைந்த அளவில் உள்ளவர்களைக் காட்டிலும் கணிசமாக அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆறு ஆண்டுகால தொடர் கண்காணிப்பில், வயது, பாலினம், புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற ஆபத்துக் காரணிகளைச் சரிசெய்த பிறகும், அதிக சைலிட்டால் உட்கொண்டவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 57 சதவீதம் அதிகமாகவே இருந்தது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களில் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இதய நோயால் ஏற்படும் மரண அபாயம் 18 சதவீதம் அதிகமாக இருந்தது.
சைலிட்டால் என்றால் என்ன? அது உடலை எவ்வாறு பாதிக்கிறது?
சைலிட்டால் என்பது மனித உடலில் இயற்கையாகவே உருவாகும் ஒரு சர்க்கரை ஆல்கஹால் ஆகும்.
இது சர்க்கரையை விடக் குறைந்த கலோரிகளுடன் இனிப்பை வழங்குவதால், பபுள்கம், உணவுகள், பானங்கள் மற்றும் பற்பசை போன்ற வாய்வழி பராமரிப்புப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. மேலும், பற்களைப் பாதிக்கும் பாக்டீரியாக்களைக் குறைத்து, சொத்தைப் பற்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் இது உதவுகிறது.
ஆனால், அதிகளவிலான சைலிட்டால் இரத்தத்தை தடிமனாகவும், ஒட்டும் தன்மையுடனும் மாற்றி, ஆபத்தான இரத்த உறைதலை (blood clot) ஏற்படுத்தக்கூடும் என்று கடந்த ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
இந்த ஆய்வின் ஆசிரியரான டொக்டர் மார்கோ விட்கோவ்ஸ்கி (Dr Marco Witkowski) கூறுகையில், “செயற்கை இனிப்பூட்டிகள் சர்க்கரையை விட ஆரோக்கியமானவை என்று மக்கள் நினைக்கிறார்கள் மற்றும் ஒழுங்குமுறை முகமைகளும் அவற்றை பொதுவாகப் பாதுகாப்பானவை என்றே கருதுகின்றன. ஆனால், இந்த சேர்க்கைப் பொருட்களின் நீண்டகால பாதுகாப்பு குறித்து நாம் எவ்வளவு குறைவாக அறிந்துள்ளோம் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு, இனிப்பூட்டிகள் பயன்பாடு நீரிழிவு, உடல் பருமன் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற வளர்ந்து வரும் ஏனைய ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகிறது.

