ஒவ்வொரு நாளும் ரூ.2.5 கோடி..!! டெக் உலகின் ஜாம்பவான் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா..!!
உலக புகழ்பெற்ற டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சத்ய நாதெல்லாவின் 2025ஆம் நிதி ஆண்டுக்கான சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். பல ஆண்டுகளாக மைக்ரோசாப்டை திறம்பட வழிநடத்தி வருகிறார். இவரது வருடாந்திர ஊதியம் 2025ஆம் நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதாவது 2024ஐ காட்டிலும் 2025இல் 22% அதிக சம்பளம் பெற்றுள்ளார்.

2025இல் சத்ய நாதெல்லா பெற்ற மொத்த சம்பளத்தின் மதிப்பு 96.5 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ. 840-910 கோடியாக இருக்கிறது. அப்படி கணக்கிட்டால் ஒவ்வொரு நாளுக்கும் 2.5 கோடி ரூபாய்க்கு மேல் அவர் சம்பளம் பெற்றுள்ளார். இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் அவரது மொத்த ஊதியம் 79.1 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
சத்ய நாதெல்லாவுக்கு கிடைத்த சம்பளத்தில் பெரும்பகுதி நிறுவன பங்குகளாகவே இருக்கிறது. மொத்த ஊதியத்தில் 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல ஊக்கத்தொகையாக அவருக்கு 9.5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மொத்த ஊதிய தொகுப்பில் அவரது அடிப்படை சம்பளம் வெறும் 2.5 மில்லியன் டாலர்கள் தான்.
மைக்ரோசாப்ட் வாரியம் சத்ய நாதெல்லாவின் ஊதியத்தை நிறுவனத்தின் வணிக வளர்ச்சியுடன் நேரடியாக இணைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் வணிகம் சிறப்பாக செயல்பட்டால் இவரது சம்பளம் கூடும். அந்த வகையில் தான் கடந்த ஆண்டில் அவரது சம்பளம் அதிகரித்துள்ளது.
2025ஆம் நிதி ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈட்டியுள்ள மகத்தான லாபமும் வருவாயுமே சத்ய நாதெல்லாவின் ஊதிய உயர்வுக்கான முக்கிய காரணமாகும். கிளவுட் கம்ப்யூட்டிங் துறை சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது லாபத்திற்கு வித்திட்டது. மொத்தமாக வருவாய், லாபம் ஆகியவை 15% வளர்ச்சியை பதிவு செய்தன. கிளவுட் கம்ப்யூட்டிங் துறை 25% வளர்ச்சியை எட்டியது.
டெக் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவன தனித்துவமான வளர்ச்சியை பெற சத்ய நாதெல்லாவின் தொலைநோக்கு பார்வையே காரணம் என நிறுவன வாரியம் நம்புவதாலே அவருக்கு சம்பளத்தை வாரி வழங்கியுள்ளது. தற்போது நாதெல்லா செயற்கை நுண்ணறிவு துறையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அசைக்க முடியாத இடத்திற்கு கொண்டு செல்வதற்கான வேலைகளீல் ஈடுபட்டுள்ளார்.செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளின் வளர்ச்சிதான் இனிவரும் காலங்களிலும் மைக்ரோசாப்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியப் புள்ளிகள் என்று வாரியம் கருதுகிறது.
