India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்பிக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தனித்தனி அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோல் லோக்சபாவி்ல 20 எம்பிக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானும் அடங்குவார் இவர்கள் தற்போது திரிபுராவில் இயங்கி வரும் தேசியவாத குடிமக்கள் கட்சி (Nationalist Citizen Party of India or NCPI) என்ற பெயரில் செயல்பட துடிப்பதோடு, தனி அணியாக நாடாளுமன்ற லோக்சபாவில் உள்ளனர்.
லோக்சபாவில் மொத்தம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 எம்பிக்கள் இருந்தனர். இதில் 20 பேர் அதிருப்தியாளர்களாக உள்ள நிலையில் 8 பேர் மட்டுமே மம்தா பானர்ஜி வசம் உள்ளனர். இதனால் 20 அதிருப்தி எம்பிக்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி கட்சியின் பொதுச்செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்பியுமான அபிஷேக் பானர்ஜி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் கடிதம் வழங்கினார். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பொதுவாக கட்சி மாறும்போது 3ல் 2 பங்கு எம்பிக்கள் அதிருப்தியாளர்களை இருக்கும்போது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாமல் போகலாம். இருப்பினும் கூட இதற்கான நடைமுறையில் ஓம்பிர்லா சுணக்கம் காட்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே தான் அபிஷேக் பானர்ஜி உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டினார். 20 அதிருப்தி எம்பிக்கள் மீதான தகுதி நீக்கம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றுமு் நீதிபதிகள் ஜோயமால்யா பக்சி, மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு நோட்டீஸ் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த வேளையில் மக்களை சபாநாயகர்சார்பில் தான் ஆஜராகி இருப்பதாக சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாரானார். அதோடு சம்பந்தப்பட்ட எம்பிக்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சமயத்தில் நீதிபதி ஜோயாமால்யா பாக்சி, ”அரசியலமைப்புக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது. அதேவேளையில் உரிய உத்தரவு சரியான நேரத்தில் உறுதி செய்யப்பட வேண்டும். அதுதான் முக்கியம். இங்கு கேள்வி என்பது நோட்டீஸ் அனுப்புவது சம்பந்தமானது அல்ல. மாறாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கைகளை முடிப்பது தொடர்பானது தான்” என்றார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் 20 பேருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.



