மாநிலத் தேர்தலுக்காக பாரிசான் நேஷனலுடன் (BN) கூட்டணி அமைப்பது குறித்து பாஸ் கட்சி பரிசீலித்து வரும் நிலையில், மலாக்காவில் அம்னோவின் பலத்தை அது மதிப்பிட்டு வருவதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். முந்தைய மாநிலத் தேர்தல்களில், சம்பந்தப்பட்ட கட்சிகளின் பலத்தைப் பொறுத்து பாஸ் கட்சி வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டதாக அவர் கூறினார்.
மலாக்காவைப் பொறுத்தவரை, அம்னோ வலுவாக இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. நாங்கள் அதைப் பற்றி விவாதிப்போம் என்று நேற்று இரவு மலாக்காவில் நடந்த பாஸ் கட்சியின் நிதி திரட்டும் இரவு விருந்தில் ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
மாராங் நாடாளுமன்ற உறுப்பினர், தொகுதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் பாஸ் உறுப்பினர்களிடம் கூறினார். கட்சித் தலைமை நடத்தும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஒருமுறை முடிவு எடுக்கப்பட்டுவிட்டால், நாங்கள் அதைச் செயல்படுத்துவோம்.
ஜோகூர் தேர்தலை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். அங்கு, பெரிகாத்தான் நேஷனல் (PN) போட்டியிடாத தொகுதிகளில், அம்னோ மற்றும் பிற BN கட்சிகளுக்கு பாஸ் கட்சி உதவியது. இறுதியில் BN, போட்டியிட்ட 56 இடங்களில் 48 இடங்களை வென்று, மாநிலத்தின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது.
நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பாஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறும், ஆனால் பாஸ் போட்டியிடாத தொகுதிகளில் (பிஎன் கூட்டணிக் கட்சிகளான) அம்னோ, மஇகா வாக்களுக்குமாறு ஜோகூர் உறுப்பினர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தினோம் என்று அவர் கூறினார்.
இந்த ஏற்பாட்டை, பாஸ் கட்சி கோல்கீப்பராகச் செயல்பட்டு அம்னோ ‘கோல்’ அடிக்க அனுமதிக்கும் ஒரு கால்பந்துப் போட்டியுடன் அவர் ஒப்பிட்டார். இறுதியில், அம்னோ வென்றது, ஆனால் நாங்கள் எந்த கோலும் அடிக்கவில்லை. ஆனால் அது பரவாயில்லை என்று அவர் மேலும் கூறினார். ஜோகூரில் போட்டியிட்ட 33 தொகுதிகளிலும் PN தோல்வியடைந்தது.



