இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக கல்வி புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிதிப் பங்களிப்பைப் பாராட்டுதல்
முதலாம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை பாடசாலைக் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்திற்குக் கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக் கடனாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

