ஆன்லைன் பத்திரப்பதிவு: வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு.. இனி டோக்கன் தேவையில்லை என அறிவிப்பு..
பொதுவாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப் பதிவுக்கு செல்லும் போது அதற்கு முன்கூட்டியே டோக்கன் பெற வேண்டும். டோக்கன் இருந்தால் தான் அன்றைய தினம் பத்திரப்பதிவிலேயே பங்கேற்க முடியும். இந்நிலையில் டோக்கன் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தே வீடு, மனை பத்திரப்பதிவு செய்யும் பணிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வரிசை முறைக்கான டோக்கன் பெற வேண்டிய தேவை இல்லை என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகளை 5 கட்டங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பதிவுத்துறையில், ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகளில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி புதிய வீடு, மனை விற்பனை பத்திரங்கள், எம்.ஓ.டி., எனப்படும் வீட்டு கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு , அடமான பத்திரம், கடன் முடிவுக்கான ரசீது ஆவணம் ஆகியவற்றை சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே பதிவு செய்யலாம்.
இதில் முதல் கட்டமாக சொத்து வாங்குவோர், பதிவுத்துறை இணையதளத்தில் தங்கள் பெயரில், லாகின் உருவாக்கி, பதிவு செய்ய வேண்டிய பத்திர வகையை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் சொத்து விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் குறித்த பெயர், முகவரி, அடையாள சான்று விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். சொத்து சம்பந்த ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
இரண்டாம் கட்டமாக ஆதார் சரிபார்ப்பு, விரல் ரேகை, புகைப்படம், கருவிழி ஆகிய பயோமெட்ரிக் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மூன்றாம் கட்டமாக முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் ஆகியவற்றை, ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். நான்காம் கட்டமாக விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரரின் பணிகள் முடியும். ஐந்தாம் கட்டமாக சார் பதிவாளர் ஆவணங்களையும் விவரங்களையும் சரிபார்த்து டிஜிட்டல் கையெழுத்து போட்டு, பத்திரப்பதிவை முடித்து வைப்பார்.
இதன்பின், விண்ணப்பதாரர் பத்திரத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது சட்டபூர்வமாக செல்லும் ஒரு ஆவணமாகவும் இருக்கும். எங்கிருந்தும் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக எழும் சந்தேகங்களை மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 1025 174 இல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
கடந்த திமுக ஆட்சியில் பேப்பர் லெஸ் பத்திரப்பதிவு அறிவிக்கப்பட்டது. தற்போது விஜய் அரசு இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. பத்திரப்பதிவுக்கு மக்கள் அலுவலகங்களுக்கு சென்று நாள் கணக்கில் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் அரசு இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதனால் எப்போதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவது தடுக்கப்படும்.

