கோலாலம்பூர்:
பினாங்கு மாநிலத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்ததில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், அரசு நிறுவனத்தின் தலைவரான ‘டத்தோ’ உட்பட 5 பேரை 4 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) விசாரணையைத் தொடர, மஜிஸ்திரேட் நூர் இடாயு சலீம் இந்தத் தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பித்தார்:
40 முதல் 50 வயதுக்குட்பட்ட அந்த ஐந்து சந்தேகநபர்களும் இன்று காலை 9 மணியளவில் ஜார்ஜ் டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆரஞ்சு நிறத் தடுப்புக்காவல் உடையில் விலங்கிடப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
முன்னதாக நேற்று முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பினாங்கு SPRM அலுவலகத்தில் இவர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு 2009-ஆம் ஆண்டு SPRM சட்டத்தின் 23-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க ‘டத்தோ’, தற்போதையத் தலைவராகவும் அப்போதையத் துணைத் தலைவராகவும் பதவி வகித்தபோது இந்த நில மோசடி அரங்கேறியுள்ளது:
2015-ஆம் ஆண்டில், செபராங் பிறை செலாத்தான் பகுதியில் உள்ள 8 அரசு நிலங்களை, அந்த ‘டத்தோ’ தனது கூட்டாளிக்குச் சொந்தமான நிறுவனத்திற்குச் சந்தை விலையை விட மிகக் குறைவான விலைக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மோசடியான நில விற்பனை மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தின் காரணமாக அரசாங்கத்திற்குச் சுமார் RM1.96 மில்லியன் நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக SPRM வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



