வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் யானைகள் மிகக் கடுமையான முறையில் பாதுகாக்கப்படும் விலங்கினமாகும்.
மதுரு ஓயா தேசிய பூங்காவின் எல்லையிலுள்ள தியபெதும பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போது, பல யானைத் தந்தத் துண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெனனிகல வனவிலங்கு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று புதன்கிழமை (19) இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இச்சோதனையின் போது சந்தேகநபரின் வசம் இருந்து பல யானைத் தந்தத் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தத் தந்தத் துண்டுகள் எங்கிருந்து பெறப்பட்டன மற்றும் சந்தேகநபர் இவற்றை என்ன நோக்கத்துக்காக வைத்திருந்தார் என்பது குறித்து வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் யானைகள் மிகக் கடுமையான முறையில் பாதுகாக்கப்படும் விலங்கினமாகும். எனவே, உரிய அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களை வைத்திருப்பது, காட்சிப்படுத்துவது, கொண்டு செல்வது அல்லது விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தத் துண்டுகளும் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

