அஜித் குமார் சகோதரரின் Jodi365 நிறுவனத்தின் சட்ட போராட்டம்.. உச்ச நீதிமன்றம் சென்ற 2 சென்னை நிறுவனங்கள்!
இந்தியாவில் ஆன்லைன் மேட்ரிமோனி சேவை மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. மாநிலம், மொழி, சமுகம், வருமானம் என பல காரணிகள் அடிப்படையில் சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 2 மேட்ரிமோனி சேவை நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய சட்ட போராட்டம் வெடித்துள்ளது.
1997ஆம் ஆண்டு முருகவேல் ஜானகிராமன் தலைமையிலான Matrimony.com என்ற நிறுவனத்திற்கும், நடிகர் அஜித்குமாரின் இளைய சகோதரரும், முன்னாள் ஐஐடி மாணவரும், மிச்சிகன் பல்கலைகழகத்தில் Ph.D பட்டம் பெற்ற அனில் குமார் உருவாக்கிய ஜோடி365 நிறுவனத்திற்கும் மத்தியில் மிகப்பெரிய டிரேட்மார்க் பிரச்சனை வெடித்துள்ளது.

Matrimony.com நிறுவனம் ஆங்கிலம் அல்லாத பிற இந்திய மாநில மொழிகளைப் பேசும் சாமானிய மக்களுக்கு மேட்ரிமோனி சேவையை கொண்டு சேர்க்கும் விதமாக Jodii என்ற மொபைல் ஆப் அதாவது செயலியை அறிமுகப்படுத்தியது. பிராந்திய மொழிகளில் வரன் தேடுபவர்களிடையே இந்த செயலி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதேவேளையில் சென்னையில் இயங்கி வரும் FreeElective Network என்ற நிறுவனத்தின் Jodi365 சேவைக்கு, Jodii என்ற பெயர் தங்களுடைய அடையாளத்தை பாதிக்கும் விஷயமாக இருப்பதாகத் ஜோடி365 நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.அனில் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கிற்கு சென்னை நீதிமன்றம் 5 வருடத்திர்கு பின்பு இப்பெயரை பயன்படுத்த தடை விதித்தது.
இந்தியாவின் முன்னணி திருமண தகவல் சேவை நிறுவனமான Matrimony.com, தனது Jodii செயலியின் பெயருக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுத் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அனில் குமார் அடித்தடுத்து டிவிட்டரில் பதிவுகளை செய்து வருகிறார். மேலும் கடந்த வாரம் வெளியான தீர்ப்பு குறித்து தனி வீடியோ பதிவையும் செய்துள்ளார்.
Matrimony.com உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ள இந்த மனுவில் Jodi என்ற பொதுவான வார்த்தைக்கு ஒரு நிறுவனம் மட்டும் தனி உரிமை கோர முடியுமா என்ற சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.
ஜோடி365 உருவாக்கிய அனில் குமார்
ஜோடி365 (Jodi365) நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.அனில் குமார் ஐஐடி மெட்ராஸ் (IIT Madras) முன்னாள் மாணவரான இவர், 17 வருடங்களுக்கு முன்பு தனது கார்ப்ரேட் வேலையை விடுத்து தனது சொந்த முயற்சியில் இத்தளத்தை கடந்த 12 வருடங்களாக நடத்தி வருகிறார்.
Jodii செயலி
இந்த நிலையில் அக்டோபர் 2021ல் முருகவேல் ஜானகிராமன் தலைமையிலான Matrimony.com நிறுவனம் Jodii என்ற பெயரில் புதிய செயலியை இதே மேட்ரிமோனி சேவையை வழங்க துவங்கியது. இந்த செயலியை முழுமையாக முடக்க நோட்டீஸை அனில் குமார் நிறுவனம் அனுப்பியது. ஆனால் இதை ஏற்கவில்லை, உடனே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
2022ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றம் வழக்கை நிராகரித்தது. இது டிரேட்மார்க் பிரச்சனை என்பதால் தகுந்த ஆதாரத்தோடு மேல்முறையீடு செய்தார் அனில் குமார். 2026 ஆகஸ்ட் 11 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அனில் குமாருக்கு சாதகமாக தீர்ப்பு வழக்கியது. Matrimony.com நிறுவனம் Jodii என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து Matrimony.com நிறுவனம் தற்போது Special Leave Petition (SLP) மூலம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதை முருகவேல் ஜானகிராமன் உறுதிப்படுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் முதலில் Matrimony.com தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்குமா என்பதை ஆய்வுக்கு பின்பு முடிவு செய்யும். உயர் நீதிமன்றத்தின் தடைக்கு இடைக்காலத் தடை கிடைக்குமா என்பதையும் காத்திருத்து தான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டால், Matrimony.com நிறுவனம் Jodii என்ற பெயரை பயன்படுத்த முடியாது.

