India
oi-Halley Karthik
டெல்லி: நாடு முழுவதும் E20 பெட்ரோல் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், சர்க்கரைக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே நிலைமையை சமாளிக்க.. வெளிநாட்டிலிருந்து சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு சர்க்கரை இறக்குமதி குறித்து இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஊரில் கரும்பு பயிரிடுவார்கள். அது சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு சர்க்கரையாகவும் வெல்லமாகவும் உற்பத்தி செய்யப்படும். E20 பெட்ரோல் உற்பத்தி இல்லாத வரை நாடு முழுவதும் இதுதான் நிலைமை. எப்போது E20 பெட்ரோல் களத்திற்கு வந்ததோ.. அப்போது முதல் கரும்பு ஆலைகள் கரும்பை சர்க்கரையாக மாற்றுவதை விட வெல்ல பாகுவாக மாற்றவே முன்னுரிமை கொடுத்தன. இதிலிருந்துதான் E20 பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும்.

இப்படியாக E20 பெட்ரோல் உற்பத்தி காரணமாக நாடு முழுவதும் சர்க்கரை விலை கிலோ ரூ.55லிருந்து, ரூ.65 ஆக அதிகரித்திருக்கிறது. வெறுமென E20 பெட்ரோல் உற்பத்தி மட்டும் இந்த விலை உயர்வுக்கு காரணம் கிடையாது. பருவமழை ஏமாற்றம், வறட்சி இதெல்லாம் கரும்பு உற்பத்தியை பாதித்திருக்கிறது. மறுபுறம் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சர்க்கரையின் தேவை அதிகரித்திருக்கிறது. இதுவும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
தேவை அதிகமாக இருக்கிறது.. ஆனால் உற்பத்தி மந்தமாக இருக்கிறது. இப்படியே போனால் விலை எகிறிடும். இதுக்கும் நம்மளைதான் மக்கள் குத்தம் சொல்லுவாங்க.. என்பதை உணர்ந்த மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்திருக்கிறது. இந்த தடை இந்த ஆண்டு செப்டம்பர் வரை அமலில் இருக்கும்.
ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும் போதாது.. இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு யோசித்திருக்கிறது. எனவே, சுங்க வரி இல்லாமல் குறிப்பிட்ட அளவுக்கு சர்க்கரையை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் என யோசித்து வருகிறது. வழக்கமாக சர்க்கரை இறக்குமதி செய்தால் அதில் 100% சுங்க வரி விதிக்கப்படும். காரணம் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால்தான். ஆனால், இப்போது உள்நாட்டிலேயே பற்றாக்குறையாக இருக்கிறது. எனவே வரி இல்லாமல் இறக்குமதிக்கு யோசித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சர்க்கரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு யோசிப்பது இதுவே முதல்முறையாகும்.
அதேபோல இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி, சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை பதுக்கி வைப்பதை தடுக்க.. ஆலைகளின் ஸ்டாக் இருப்பு அளவை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தாலும்.. E20 பெட்ரோல் உற்பத்தியை கொஞ்சம் குறைத்துக்கொண்டு, சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு யோசித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




