கிராமப்புற விவசாய நிலங்களை விற்பனை செய்தால் வரி செலுத்த வேண்டுமா? நகர்ப்புற நிலங்களுக்கு எவ்வளவு வரி?
நம் நாட்டில் அவரவர் பெரும் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இது வெறும் சம்பளதாரர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அல்லது விவசாய நிலத்தை விற்பனை செய்தாலும் வரி கட்ட வேண்டுமா? இந்த கேள்வி உங்களில் பலருக்கு வந்திருக்கலாம். முன்னோர்கள் சேர்த்து வைத்திருந்த சொத்தாக இருந்தாலும் சரி.. நீங்களே உழைத்து வாங்கிய சொத்தாக இருந்தாலும் சரி.. அதை விற்பனை செய்யும் போது நாட்டின் குடிமகனாக ஒரு சில விஷயங்களை நீங்கள் செய்தே ஆக வேண்டும். அப்படி விவசாய நிலத்தை விற்றால் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? யாருக்கெல்லாம் வரி விலக்கு கிடைக்கும்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
கிராமப்புற நிலங்களுக்கு வரி உண்டா?: கிராமப்புறங்களில் அமைந்திருக்கும் விவசாய நிலங்களை விற்பனை செய்தால் எந்த வரியும் கட்ட தேவை இல்லை. இதற்கு மூலதன ஆதாய வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 2(14)(iii)-ன் கீழ் விவசாய நிலம் கேப்பிட்டல் அசட்டாக கருதப்படாது. அதனால் இதற்கு வரி செலுத்தத் தேவையில்லை.

இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி ஒரு சில விதிகளைக் கொண்டுதான் விற்பனை செய்யப்படும் நிலம் கிராமப்புற நிலமா? அல்லது நகர்ப்புற நிலமா? என்பது தீர்மானிக்கப்படும்.
எந்த நிலம் கிராமப்புற நிலமாகக் கருதப்படும்?: ஒரு விவசாய நிலம் கிராமப்புற நிலமா? அல்லது நகர்ப்புற நிலமா? என்பதை தீர்மானிப்பது அங்குள்ள நகராட்சிக்கும் அந்த நிலமிருக்கும் இடத்திற்குமான வான்வழி தூரத்தை பொருத்தது. மேலும் அந்த குறிப்பிட்ட நகராட்சியில் மக்கள் தொகை எவ்வளவு? என்பதையும் கணக்கிட வேண்டும். சுமார் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சி அல்லது கண்டோன்மென்ட் வாரியத்திற்கு வெளியே அமைந்திருக்கும் நிலங்கள் கிராமப்புற நிலமாக கருதப்படும்.
ஒரு நகராட்சியில் மக்கள் தொகை 10,000 முதல் 1 லட்சம் வரை இருக்கிறது என்றால்.. அந்த நகராட்சியில் இருந்து 2 கிலோமீட்டருக்கு அப்பால் உங்கள் நிலம் இருக்க வேண்டும். அதேபோல ஒரு நகராட்சியில் மக்கள் தொகை 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கிறது என்றால் அந்த நகராட்சியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டரைத் தாண்டி நிலம் இருக்க வேண்டும்.
மக்கள் தொகை 10 லட்சத்திலிருந்து அதற்கு மேல் வரை இருக்கிறது என்றால் அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டருக்கு அப்பால் உங்கள் விவசாய நிலம் இருக்க வேண்டும். இப்படி இருக்கும் நிலங்களை விற்பனை செய்தால் நீங்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.
ஒருவேளை மேலே கூறப்பட்டுள்ள எல்லைகளுக்குள் உங்கள் நிலம் இருந்தால் அதற்கு கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். இந்த எல்லையை எல்லாம் தாண்டி இருக்கும் கிராமப்புற விவசாய நிலங்களுக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நகர்ப்புற விவசாய நிலங்களுக்கு வரி கட்ட வேண்டுமா?: நகர்ப்புற விவசாய நிலங்களை விற்பனை செய்பவர் கண்டிப்பாக வரி செலுத்த வேண்டும். எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது நீங்கள் எத்தனை ஆண்டுகள் அந்த நிலத்தை வைத்திருந்தீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும்.
ஒரு உரிமையாளர் 2 ஆண்டுகள் வரை நகர்ப்புற விவசாய நிலத்தை வைத்திருந்து விற்பனை செய்தாலோ அல்லது அதற்கும் குறைவான ஆண்டுகள் வைத்திருந்தாலோ கிடைக்கும் லாபமும் அவர்களுடைய வருமானத்தையும் சேர்த்து கணக்கிட்டு வரி விதிக்கப்படும். அதுவே ஒரு உரிமையாளர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய நிலத்தை வைத்துக்கொண்டு அதன் பிறகு விற்பனை செய்தால் 12.5% முதல் 20 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.
ஐடிஆர் தாக்கல் செய்யும்போது வருமான விவரங்களைக் காண்பிக்க வேண்டுமா?: நீங்கள் விற்பனை செய்யும் நீலம் கிராமப்புற நிலமாக இருந்து, அதற்கு வரி விலக்கு கிடைத்தாலும் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது கண்டிப்பாக நீங்கள் விற்ற விவரங்களை வருமான வரித்துறைக்கு காண்பிக்க வேண்டும். கிராமப்புற நிலம் என்றால் ஐடிஆர் படிவத்தில் Schedule EI (Exempt Income) என்ற பகுதி இருக்கும். அதில் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும். அதுவே நகர்ப்புற நிலம் என்றால் Schedule CG என்ற பகுதியில் குறிப்பிட வேண்டும்.

