குவாந்தான்:
பகாங், பெந்தோங் அருகே உள்ள புக்கிட் திங்கி பிரம்மரிஷி ஆலயத்தில் இந்து தெய்வச் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகப் மூன்று போலிஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றதாக நம்பப்படும் இச்சம்பவம் தொடர்பாக 49 வயது பாதுகாப்பு அதிகாரி, 45 வயது பூசாரி மற்றும் 41 வயது நபர் ஆகிய மூவர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து இன்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட பகாங் மாநில இடைக்காலப் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் ஐயோப்கூறுகையில், “சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று போலிசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இருப்பினும், அந்த ஆலயப் பகுதியில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதோடு, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை” என்றார்.
இந்த விவகாரத்தை காவல்துறை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது. சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் மற்றும் அதற்கான பின்னணி என்ன என்பதை கண்டறியத் தீவிர புலனாய்வு நடைபெற்று வருகிறது.


இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 (Section 295 of Penal Code – வழிபாட்டுத் தலத்தை அவமதித்தல்) மற்றும் 1998-ஆம் ஆண்டு தொடர்பாடல் மற்றும் பல்லூடகம் சட்டத்தின் பிரிவு 233 (Section 233 of CMA 1998) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் இது குறித்து ஊகங்களை வெளியிடுவதையோ அல்லது வதந்திகளைப் பரப்புவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என டத்தோ அஸ்ரி அக்மார் கேட்டுக்கொண்டார். இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் அறிந்திருப்போர் உடனடியாகக் காவல்துறையிடம் தெரிவித்து விசாரணைக்கு உதவுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.



