நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் 3 மணியளவில் குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து இந்தப் படகு, நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டுள்ளது. எனினும், குறித்த படகு உரிய நேரத்துக்கு நெடுந்தீவை சென்றடையவில்லை என கடற்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிச் சென்ற படகு ஒன்று, நயினாதீவு கடற்பகுதியில் விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்த 10 பயணிகளும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் 3 மணியளவில் குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து இந்தப் படகு, நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டுள்ளது. எனினும், குறித்த படகு உரிய நேரத்துக்கு நெடுந்தீவை சென்றடையவில்லை என கடற்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
விபத்துக்குள்ளான போது படகில் 08 ஆண்கள் மற்றும் இரு பெண்கள் என மொத்தம் 10 பேர் பயணித்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை கடற்படையினரைத் தொடர்புகொண்டு உடனடி மீட்புப் பணிகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, கடற்படையினர் நயினாதீவு மற்றும் நெடுந்தீவு பகுதி மக்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, 10 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.
கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் கடல் பயணங்களைத் தவிர்க்குமாறு முன்னதாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் படகு பயணித்ததே இந்த அனர்த்தத்துக்கு காரணம் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு அங்கிகள் (Life Jackets) வழங்கப்பட்டதா என்பது குறித்தும், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப் பணித்துள்ளார். மேலும், கடல் வழிப் பயணிகள் பாதுகாப்பு நடைமுறைகளை இனிவரும் காலங்களில் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

