Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 167 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார். இதன் மூலமாக இந்திய அணியின் நம்பர் 3 வரிசையில் நிரந்தர இடத்தை பிடித்திருப்பதோடு, சாய் சுதர்சனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ரன்களை குவித்திருக்கிறது. இந்திய அணி சார்பாக தேவ்தத் படிக்கல் 230 பந்துகளில் 1 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 167 ரன்களை விளாசினார்.

அதேபோல் கேஎல் ராகுல் 175 பந்துகளில் 82 ரன்களும், துருவ் ஜுரெல் 51 ரன்களும் விளாசினர். இதன் மூலமாக இந்திய அணி ஆதிக்கம் செய்வதாக பார்க்கப்படுகிறது. மழை குறுக்கிடாமல் இருந்தால், இந்திய அணியால் எளிதாக இந்தப் போட்டியில் வெல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் தேவ்தத் படிக்கலின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சவுரவ் கங்குலிக்கு பின் இந்திய அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை தேவ்தத் படிக்கல் படைத்திருக்கிறார். மொத்தமாக 3 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள படிக்கல், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் விளாசி இருக்கிறார். இந்தப் போட்டிக்கு முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில் படிக்கல் அபாரமாக விளையாடி சதம் அடித்திருந்தார்.
அதேபோல் உள்நாட்டு கிரிக்கெட் தொடரிலும் அபாரமான ஃபார்மில் இருந்தார். ஆனாலும் சாய் சுதர்சன் காயம் காரணமாகவே படிக்கலுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை தேவ்தத் படிக்கல் நன்றாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார். ஏனென்றால் படிக்கலை விடவும் சாய் சுதர்சன் அதிக வாய்ப்புகளை பெற்ற போதும், இதுவரை இப்படியான இன்னிங்ஸை ஆடியதில்லை.
இதனால் இந்த டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணியின் நம்பர் 3 பேட்டிங் வரிசைக்கு முதன்மை சாய்ஸாக படிக்கல் தான் இருப்பார் என்று கருதப்படுகிறது. ஆசிய மைதானங்களில் படிக்கல் எளிதாக ரன்களை குவித்தாலும், SENA நாடுகளில் எவ்வாறு ரன்கள் சேர்ப்பார் என்பதை பார்க்க ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் சாய் சுதர்சனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் சில ஆண்டுகள் தள்ளி போகலாம் என்றும் கருதப்படுகிறது.

