மியூச்சுவல் ஃபண்ட், PF கணக்குகளில் நாமினி பெயர் எப்போது எக்ஸ்பைரி ஆகும் தெரியுமா? இத மாத்தலன்னா சிக்கல்!
ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை உரியவர் அனுபவிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கு வங்கி கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, இன்சூரன்ஸ் பாலிசி, பிஎஃப் என எதுவாக இருந்தாலும் நாமினி யார் என்று நியமிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால் அவருடைய பணத்தை யார் பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதே இந்த நாமினி தான்.
ஒரு சிலர் ஒரு முறை நாமினியை தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் பிறகு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றனர். ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாமினி மாறக்கூடும். அதை அவ்வப்போது சரிபார்த்து உங்களுடைய அனைத்து கணக்குகளிலும் அப்டேட் செய்வது அவசியமாகும். கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் உங்கள் நீங்கள் விரும்பிய நபருக்கு போய் சேர வேண்டும் என்றால் இதை சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் அவர்கள் சிரமம் ஏதுமின்றி உங்கள் பணத்தை பெற முடியும்.

எப்போது நாமினியை மாற்ற வேண்டும்?: வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு சூழலிலும் நமக்கு ஒரு சிலர் முக்கியமானவர்களாக இருப்பார்கள். உதாரணமாக நீங்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் போது, உங்கள் பெற்றோரை நாமினியாக வைத்திருப்பீர்கள். வேலைக்கு சேர்ந்தவுடன் அப்பா, அம்மா ஆகிய இருவரில் யாரோ ஒருவரை நாமினியாக தேர்ந்தெடுத்திருப்பீர்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு உங்களுடைய கணவரையோ அல்லது மனைவியையோ விருப்பப்பட்டால் குழந்தைகளையோ நாமினியாக சேர்க்க விருப்பப்படலாம்.
உங்கள் வங்கி கணக்கு, ஈபிஎஃப் கணக்கு, இன்சூரன்ஸ் மற்றும் பிற முதலீடுகள் என எந்த கணக்காக இருந்தாலும் சரி நாமினி யார் என்று அப்டேட் செய்வது முக்கியம். அதுவும் திருமணத்திற்கு பிறகு இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு சில நேரங்களில் திருமணம் ஆன தம்பதியினர் விவாகரத்து ஆகி பிரியும் சூழல் வந்தால் அப்போது உங்களுடைய கணவர் அல்லது மனைவி பெயரை மாற்றியமைக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக நீங்கள் ஏற்கனவே நியமித்த நாமினி இறந்திருந்தால் புதிய நாமினியை நியமிக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினர் பணத்தை பெறுவதில் தாமதம் ஏற்படும். அதோடு அதிகப்படியான சான்றிதழ்களை வழங்க வேண்டியிருக்கும். இதாவது பரவாயில்லை வீண் அலைச்சலுக்கு ஆளாகி.. மன உளைச்சலுக்கு ஆட்படும் நிலையும் ஏற்படலாம்.
சிலர் தங்களுடைய சொத்து, வீடு, மனை என சிலவற்றை தான் இறந்த பிறகு யார் அனுபவிக்க வேண்டும் என்பதற்கான உயில் எழுதி வைப்பார்கள். உயில் எழுதி விட்டால் பிற கணக்குகளுக்கு நாமினி மாற்றம் செய்யப்படும் என்று தவறாக நினைக்காதீர்கள். உயில் வேறு.. நாமினி வேறு..
உயில் என்பது உங்களுடைய சொத்துக்களை சட்டப்பூர்வமாக நீங்கள் எழுதி வைக்கும் ஆவணம். அதுவே நாமினி என்பது உங்கள் வங்கி கணக்கு, முதலீட்டு திட்டங்கள், இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் யாரை சேர வேண்டும் என்பதற்காக நீங்கள் உயிருடன் இருக்கும்போதே செய்யும் செயல்முறை. எனவே இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் விருப்பப்படும் நபர் உங்கள் சொத்து மற்றும் பணத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அவ்வப்போது நாமினி விவரங்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் ஈபிஎஃப் கணக்குகளில் நாமினியின் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்தால் அதை உடனடியாக மாற்றுங்கள். இதற்கு அலைந்து திரிய வேண்டிய அவசியம் பெரிதாக இருக்காது. அனைத்தையும் ஆன்லைன் மூலமாக முடித்து விடலாம். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் விருப்பப்படும் நபர் எந்த சிரமமும் இன்றி உங்கள் சொத்துக்களை அனுபவிக்க முடியும்.
