மலாக்கா:
மலேசியாவில் வாழும் மலாய்ச் சமூகத்தின் நிலைக்குப் பிற இனத்தவர்களின் வருகை அல்லது இருப்பு அச்சம் அல்ல; மாறாக வறுமையும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற சமூகச் சீரழிவுகளுமே உண்மையான அச்சுறுத்தல்கள் என்று PKR கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் (MITC) நடைபெற்ற 2026 PKR தேசியக் காங்கிரஸின் நிறைவு விழாவில் உரையாற்றிய உள்துறை அமைச்சருமான சைஃபுதீன் நசுத்தியோன் உரையாற்றுகையில், “சீனர்களாலோ அல்லது இந்தியர்களாலோ மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. வறுமையில் வாடுவதும், போதைப்பொருள் பழக்கத்தில் அதிக அளவில் ஈடுபடுவதும் மட்டுமே மலாய்ச் சமூகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.” என்று அவர் சொன்னார்.
சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனத்தின் (AADK) தரவுகளின்படி, நாட்டில் சராசரியாக 100,000 பேரில் 560 பேர் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பெர்லிஸ், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், இந்த எண்ணிக்கை 100,000 பேருக்கு 1,000-க்கும் மேல் பதிவாகியுள்ளது கவலையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக 15 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், அதில் எஸ்.பி.எம் (SPM) கல்வித் தகுதி வரை முடித்தவர்களே இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஏனைய அரசியல் கட்சிகள் மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தாமல், DAP கட்சியைக் காட்டி அச்சத்தை ஏற்படுத்துவதைக் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராமல் போதைப்பொருளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க முடியாது எனச் சைஃபுதீன் தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.



