Tamilnadu
oi-Vignesh Selvaraj
விழுப்புரம்: தொகுதி மறுவரையறையால் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 351-ஆக உயரும் என்றும் அவர்களில் 117 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயமாக பெண்கள்தான் வர முடியும் எனவும் பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா தென் மாநிலங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. மக்கள்தொகை பெருக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தது தவெக அரசு. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதேசமயம், பாமக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “காங்கிரஸின் அழுத்தம் காரணமாகவே தொகுதி மறுவரையறைக்கு எதிராக தவெக அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறை என்பது தேவையானதுதான். ஏனெனில், தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தொகுதி மறுவரையறையால் 59-ஆக உயரும்.
இந்த மசோதாவை 3 மாதங்களுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, அனைத்து மாநிலங்களிலும் 50 விழுக்காடு உயர்த்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
நாட்டின் 543 தொகுதிகளில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் என்பது 7.1 சதவிகிதமாகும். தொகுதி மறுவரையறையால் இது மாறாது.
எம்.பி.க்கள் 39-லிருந்து 59-ஆகவும், 234 எம்.எல்.ஏ.க்களிலிருந்து 351-ஆகவும் உயரும். அவர்களில் 117 எம்.எல்.ஏ.க்கள் கட்டாயமாக பெண்கள்தான் வர முடியும். தொகுதி மறுவரையறையால் பெண் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் கூடுதலாக வருவார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு எம்.பி.க்கு சராசரியாக 20 லட்சம் மக்கள்தொகை. இந்த 20 லட்சம் மக்கள்தொகையை ஒரு எம்.பி.யால் பார்க்க முடிவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தருமபுரியின் 2,000 கிராமங்களை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால், ஒரு எம்.பி.க்கான மக்கள்தொகை 15 லட்சமாகவும், வாக்காளர்கள் 10 லட்சமாகவும் குறையும்.
இங்கிலாந்து நாட்டில் 6.5 கோடி மக்களுக்கு 650 எம்.பி.க்கள் உள்ளனர். அங்கு ஒரு எம்.பி.க்கு ஒரு லட்சம் மக்கள்தொகைதான். சீனாவில் 140 கோடி மக்கள்தொகைக்கு 3,000 எம்.பி.க்கள் உள்ளனர். தொகுதி மறுவரையறையால் மக்களைச் சாதாரணமாகக் காணலாம். அரசின் திட்டங்களையும் எளிதாக கொண்டு சேர்க்கலாம்.
தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும், தெற்கில் குறைந்து விடும் என்றும் சிலர் கூறுகின்றனர். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அனைத்து மாநிலங்களிலும் விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் அதிகரிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

