International
oi-Nantha Kumar R
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் இன்று காலையில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 38 பேர் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக இனு்று மாலையில் மீண்டும் 6.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் இந்தோனேஷியா மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை 3.28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேஷியாவின் ப்ளோர்ஸ் மண்டலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கிழக்கு நுசா தெங்காரா கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் பதிவானது. இதனால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர்.
இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக 38 பேர் பலியாகினர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. இதனால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் சிரமம் நிலவி வருகிறது.
வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இப்படியான சூழலில் தான் இன்று மாலையில் இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் வடக்கு சுமத்ரா தீவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. மேடான் என்ற இடத்தில் இருந்து 126 கிலோமீட்டர் தென்கிழக்கு பகுதியில் உள்ள பெமடாங்ஸியான்டர் என்ற இடத்தில் பூமிக்கடியில் 183 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இதனை புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆரராய்ச்சி மையம் கூறியுள்ளது. இருப்பினும் 2வது நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் இந்தேனேஷியாவில் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

