8ஆவது சம்பள கமிஷன விடுங்க.. அதுக்கு முன்னாடியே சம்பள உயர்வு கிடைக்கப்போகுது.. அரசு ஊழியர்களே ரெடியா?
மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே சம்பள கமிஷன் தாமதம் ஆகிறது என அதிருப்தியில் உள்ளனர். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 1ஆம் தேதியே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பள கமிஷன் தாமதத்தால் சம்பள உயர்வு தள்ளி போயுள்ளது.
சம்பள உயர்வு தாமதமானாலும் அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர போகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்த கணக்கீடுகளை அரசு முடித்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், ஜூலை 2026 முதல் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள ஜூன் 2026-க்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, அகவிலைப்படி தற்போதுள்ள 60%லிருந்து 63% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 3 சதவீத உயர்வு உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய இருமுறை திருத்தப்படுகிறது. இது 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, நுகர்வோர் விலை குறியீட்டு சராசரியை கொண்டு கணக்கிடப்படுகிறது. ஜூன் மாதத்திற்கான குறியீட்டு எண் 151.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த தரவுகளின்படி கணக்கிடும்போது, அகவிலைப்படி 63% என அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஜூலை 1, 2026 முதலே இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைக்கு வந்தாலும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கடந்த காலங்களில், ஜூலை மாதத்திற்கான உயர்வு அறிவிப்புகளை அரசு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வெளியிட்டுள்ளது. எனவே, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட கூடுதல் தொகை கிடைக்கும். உதாரணமாக 35,400 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு மாதம் சுமார் 1,062 வரை உயர்வு கிடைக்கலாம். இந்த உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிடப்படுவதால், அரியர் பணமும் வழங்கப்பட்டுவிடும்.
அகவிலைப்படி உயர்வை போலவே, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலை நிவாரணமும் அதே விகிதத்தில் உயரும். மத்திய அரசு 8ஆவ்து சம்பள கமிஷன் அமைத்துள்ள போதிலும், அதன் பரிந்துரைகள் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேவைபப்டும் என சொல்லப்படுகிறது. அதுவரை ஆண்டுக்கு இரண்டு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டு, புதிய முறையில் கணக்கீடுகள் தொடங்கும்.

