Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
தூத்துக்குடி: தவெக அமைச்சர்கள் சொல்வது போல் திமுக – அதிமுக இடையிலான கூட்டணிக்கு எந்த காலத்திலும் வாய்ப்பில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். பாஜகவை எதிர்த்து தவெக இதுவரை எந்த விவகாரத்திலும் பேசியதாக நினைவில் இல்லை என்று கூறிய கனிமொழி, தவெக நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டால், அவர்களை பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாக சாடியுள்ளார்.
அண்மையில் திமுக எம்பி கனிமொழி சோமு மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின், சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் கனிமொழி பங்கேற்றார்.

இதனால் திமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க நெருக்கம் காட்டி வருவதாக தவெக அமைச்சர்களான சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பேசத் தொடங்கினர். அதேபோல் திமுக – அதிமுக கூட்டணி அமைக்கும் நாள் வெகு தொலையில் இல்லை என்றும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு பின் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
முதல்வர் விஜய் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு கொடுப்போம் என்ற பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கனிமொழி, இதுவரைக்கும் மத்திய அரசை எதிர்த்து முதல்வர் விஜய்யோ, அமைச்சர்களோ எந்த கேள்வியும் எழுப்பியதாக எனக்கு நினைவில் இல்லை. 3 நாட்களுக்கு முன்பாக கனிமவளம் தொடர்பான மசோதா விவாதமே இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அது தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிதியை பாதிக்கக் கூடிய, மாநில உரிமைகளை பாதிக்கக் கூடிய ஒரு மசோதா நிறைவேறியது. அதனைப் பற்றி கூட தவெக அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. பாஜகவை எதிர்ப்போம், எதிர்ப்போம் என்று வாய் வார்த்தையாக சொல்கிறார்களே தவிர, தமிழ்நாட்டை பாதிக்க கூடிய பிரச்சனைகளை கூட எதிர்த்து எதுவும் பேசுவதில்லை என்பதே உண்மை.
அதேபோல் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீட்டித்திருப்பது வாழ்த்துக்குரியது என்றார். தொடர்ந்து திமுக – அதிமுக கூட்டணி என்று தவெகவினர் பேசுகிறார்களே என்ற கேள்விக்கு, தவெகவினரின் கனவாக அது இருக்கலாம். ஆனால் நிச்சயமாக எந்தக் காலத்திலும் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக பெண் நிர்வாகிகள் தொடர்ச்சியாக பாலியல் புகார் அளிப்பது தொடர்பான கேள்விக்கு கனிமொழி, தொடர்ச்சியாக இப்படியான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. தூத்துக்குடியில் மட்டுமே இப்படியான புகார்கள் வருவது 3வது முறையாகும். இந்த குற்றச்சாட்டுகள் வந்தாலும், வழக்குப்பதிவு செய்யப்படுவதோ, கைது நடவடிக்கையோ எடுக்கப்படுவதில்லை.
தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தங்கள் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் மீது ஒரு குற்றம் சுமத்தப்படும் போது, அவர்களை பாதுகாப்பதில் தான் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைப்பதே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.



