தமிழ்நாட்டில் BSNL 4ஜி ரெடியாகிடுச்சு! ரீசார்ஜ் கட்டண அதிகரிப்புக்கு மத்தியில் ஏர்டெல், ஜியோவை ஓரங்கட்டுமா?
சமீபகாலமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சில தினங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் தங்களுடைய குறைந்த ரீசார்ஜ் திட்டமான ரூ.299 பிளானை நீக்கிவிட்டு ரூ.349 பிளானை குறைந்தபட்ச பிளானாக மாற்றியது. அப்படி இருக்கையில் அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் 4ஜி டவர்களை அமைக்க திட்டமிட்டு வருகிறது.
இதற்கான பணிகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டன. 2026-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி 98,557 4ஜி டவர்கள் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன. அதில் 97,213 டவர்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கும் வந்துவிட்டன என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

1 லட்சம் 4ஜி டவர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த BSNL நிறுவனம் சுமார் 98.6 சதவீத பணியை முடித்துள்ளது. ஏற்கனவே நிறுவப்பட்ட 99% டவர்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
BSNL நிறுவியுள்ள 4ஜி டவர்கள் அனைத்தும் இன்டிஜெனஸ் டெக்னாலஜி என்று சொல்லப்படும் இந்திய தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுமார் 97,213 4ஜி டவர்கள் முடிக்கப்பட்டுள்ளதாக இந்தியா தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சரான பெம்மசானி சந்திர சேகர் தெரிவித்திருக்கிறார்.
மாநில வாரியான விபரங்கள்: மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,890 டவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 9,725 டவர்கள் அமைக்கும் பனி முடிந்துள்ளது. இதில் 9,545 டவர்கள் செயல்பாட்டிற்கும் வந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் 7,323 டவர்களை நிறுவி அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம். அதே போல கேரளாவில் 6,886 டவர்கள் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. உத்தர பிரதேசத்தில் 6920 டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆந்திர பிரதேசத்தில் 6,098 டவர்களும், ராஜஸ்தானில் 5,665 டவர்களும் நிறுவப்பட்டுள்ளன.
டெல்லி மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற சில பகுதிகளில் மட்டும் பணிகள் பாக்கி இருக்கின்றன. அவற்றையும் சீக்கிரம் முடிக்கவுள்ளதாக பிஎஸ்என்எல் அறிவித்திருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
அதற்காக ரூ. 3.18 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 4ஜி சேவையை விரிவுபடுத்துவதற்காக மட்டும் 2025-ஆம் ஆண்டில் ரூ.6982 கோடி ஒதுக்கப்பட்டது. 2022-ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வருவாய் ரூ.19,053 கோடியாக இருந்த நிலையில் 2026-ஆம் நிதியாண்டில் ரூ.25,049 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆனால் 2025-ஆம் ஆண்டில் ரூ.2,247 கோடியாக இருந்த நஷ்டம், 2026-ஆம் ஆண்டில் ரூ.4,738 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து பிஎஸ்என்எல் தங்களுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
2022 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 11.37 கோடியாக இருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் 9.29 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் இந்த 4ஜி சேவையின் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

