Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
தஞ்சாவூர்: தவெக ஆட்சி அமைக்கப்பட்ட 100 நாட்களில் சொத்து வரியை உயர்த்திவிட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். 100 நாள் ரீல்ஸ் ஆட்சியில் மக்களுக்கான எந்த புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடியை தவெக அரசு வெளியிடவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
காவிரி நதி நீர் மற்றும் மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் அமைதி காத்து வருகிறார். அதேபோல் தவெக அளித்த வாக்குறுதி தேர்தல் வாக்குறுதியான பயிர்க்கடன் தள்ளுபடியும் முழுமையாக செய்யப்படவில்லை. இதனை கண்டித்து அதிமுக சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை முழுமையாக தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
தமிழ்நாட்டில் ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்று பேசி ஆதவ் அர்ஜுனா கனவு தான் காண முடியும். தவெகவின் 100 நாள் ஆட்சியில் மக்களுக்கு எந்தவித திட்டங்களும் இல்லை. வெறும் ரீல்ஸ் போடுகிறார்கள்.. ரீல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் என்று ஏராளமானோர் போராடி கொண்டே இருக்கிறார்கள். மக்களுக்கான திட்டங்களை பார்க்க முடியவில்லை.
பட்ஜெட்டில் அனைத்து திட்டங்களுக்கும் வெற்றி என்று பெயர் தான் மாற்றி இருக்கிறார்கள். எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால் என்ன.. சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன.. இதையெல்லாம் பொதுவெளியில் பேச முடியாது. அதேபோல் சொத்து வரி உயர்வு தான் ஆரம்பம்.
இனி பாருங்கள்.. இன்னும் என்னென்ன வரிகள் உயரப் போகிறது என்று.. கடன் அதிகமாகி கொண்டே போகிறது.. திமுக ஆட்சியின் போது இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு ரூ.11,000 கோடி ஒதுக்கி ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்தார்கள். ஆனால் தவெக பட்ஜெட்டில் அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. 3 மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். 3 மாதத்தில் ரூ.17 ஆயிரம் கோடி வருவாய் செலவு என்று தெரிவித்துள்ளார்.

