Tamilnadu
oi-Yogeshwaran Moorthi
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகு இன்றில் 9 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்வது தொடர் கதையாகி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவு – தலைமன்னார் அருகே கடலில் மீன் பிடித்த போது 2 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்திருக்கின்றார். இதன்பின் எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடித்ததாக கூறி 9 பேரையும், விசப்படகுகளையும் சிறை பிடித்து கைது செய்தனர். மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே 5 நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளின் என்ஜின் பழுதாகி, இலங்கை பகுதிகளில் கரை ஒதுங்கியது. அப்போது 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, அந்நாட்டு சிறையில் அடைத்தது. தற்போது மீண்டும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வாரத்தில் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனால் மீனவர்களை விரைவாக விடுவிக்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

