மானியமில்லாத டீசலின் விலையும் 10 சென் குறையும். இந்த விலைகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நாளை முதல் RON97 பெட்ரோல், மானியமில்லாத RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் குறையும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
RON97 பெட்ரோல் லிட்டருக்கு ரிம 4.15 என விற்கப்படும் (தற்போதுள்ள ரிம 4.35-லிருந்து 20 சென் குறைவு). மானியமில்லாத RON95 லிட்டருக்கு ரிம 3.62 என விற்கப்படும் (தற்போதுள்ள ரிம 3.77-லிருந்து 15 சென் குறைவு).
அதேவேளையில், மானியமில்லாத டீசல் லிட்டருக்கு ரிம 4.47 என்ற சில்லறை விலையில் விற்கப்படும் (தற்போதுள்ள ரிம 4.57-லிருந்து 10 சென் குறைவு).
BUDI95 திட்டத்தின் கீழ் RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு ரிம 1.99 என்ற விலையிலேயே விற்கப்படும். BUDI டீசல் திட்டத்தின் கீழ் டீசலின் விலை லிட்டருக்கு ரிம 2.10 என நிர்ணயிக்கப்படும்.
மானியப் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் வழங்கப்படும் மானியப் பெட்ரோல் லிட்டருக்கு ரிம 2.05 என்ற அளவிலும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKDS) கீழ் வழங்கப்படும் மானிய டீசல் லிட்டருக்கு ரிம 2.15 என்ற அளவிலும் மாற்றமின்றி தொடரும்.
இந்த விலைகள் ஆகஸ்ட் 19 வரை அமலில் இருக்கும்.
கடந்த வாரத்தில் உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே மானியமில்லாத பெட்ரோலிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுவது தொடர்ந்து தாமதமாகும் என்ற கவலைகளுக்கு இடையே, திங்கள்கிழமையன்று கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 5% உயர்ந்ததை அது சுட்டிக்காட்டியுள்ளது.
“எதிர்காலத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கவும், மானியச் செலவினங்களின் அழுத்தத்தைக் குறைக்கவும் பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும், பயணங்களைத் திறம்படத் திட்டமிடவும், தேவையற்ற பயணங்களைக் குறைக்கவும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
