கிரீன் கார்டு புதுப்பித்தல், அமெரிக்க குடியுரிமை, புகலிடம் மற்றும் வேலை அனுமதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பங்கள் படிப்படியாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படவுள்ளன.
அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கும், அங்கு வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியர்களுக்கும் மிக முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USCIS), தனது விண்ணப்ப நடைமுறைகளை காகித முறையிலிருந்து முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றும் அதிரடி நடவடிக்கையைத் ஆரம்பித்துள்ளது.
குடியேற்றம் தொடர்பான விண்ணப்பங்களை இனி ஆன்லைன் வழியில் மட்டுமே தாக்கல் செய்யும் புதிய விதிமுறை ஓகஸ்ட் 11, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, கிரீன் கார்டு புதுப்பித்தல், அமெரிக்க குடியுரிமை, புகலிடம் மற்றும் வேலை அனுமதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பங்கள் படிப்படியாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படவுள்ளன.
அனைத்து விண்ணப்பங்களும் ஒரே நாளில் ஆன்லைன் முறைக்கு மாறாது என்று USCIS தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை அமல்படுத்துவதற்கு 60 நாட்களுக்கு முன்பே பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும். மேலும், அந்தப் படிவம் குறைந்தது 180 நாட்களாவது ஆன்லைன் தளத்தில் பயன்பாட்டிற்குத் தரப்பட்டிருக்க வேண்டும்.
நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2025 நிதியாண்டில் மட்டும் காகித ஆவணங்களைக் கையாள சுமார் 396 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் முறை மூலம் விண்ணப்பங்களில் ஏற்படும் பிழைகளைத் தவிர்க்கலாம் மற்றும் தரவுகளை வேகமாகச் சரிபார்த்து மோசடிகளைக் கண்டறிய முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் பொதுவாக USCIS ஆன்லைன் கணக்கை உருவாக்கி, அதன் மூலம் நேரடியாகப் படிவங்களை நிரப்பலாம் அல்லது பி.டி.எஃப் (PDF) கோப்புகளாகப் பதிவேற்றலாம். இதன்மூலம் தபால் மூலம் ஆவணங்களை அனுப்புவதும், அவை சென்றடையக் காத்திருக்கும் காலமும் குறையும். விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனிலேயே கண்காணிப்பதும் எளிதாகும்.
விலக்கு அளிக்கப்படுமா?
தொழில்நுட்ப வசதி இல்லாதவர்கள் அல்லது டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கச் சிரமம் உள்ளவர்களுக்கு முழுமையாகக் கதவு மூடப்படவில்லை. தகுந்த காரணங்களைக் கூறி விலக்கு கோருபவர்களுக்கு 25 டொலர் கட்டணத்தில் காகித முறையில் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படலாம்.
இலங்கை மற்றும் இந்தியர்களுக்கு முக்கியத்துவம்
வேலை அடிப்படையிலான கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியர்கள், H-1B விசா வைத்திருப்பவர்கள் மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்தப் புதிய மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் பழைய நடைமுறைகளை மட்டும் நம்பியிருக்காமல், USCISஇன் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை உடனுக்குடன் சரிபார்ப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


