ISRO: தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசு.. என்ன காரணம்..?
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி துறைக்கு முதுகெலும்பாக இருக்கும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு உறுதுணையாகவும், அதிகளவிலான ராக்கெட்களை விண்ணில் செலுத்தலும், தனியார் நிறுவனங்களின் ராக்கெட்களை ஆய்வு செய்யவும் என பல காரணங்களுக்காக இந்திய விண்வெளி துறைக்கு 2வது ஏவுதளம் தூத்துகுடி மாவட்டத்தின் குலசேகரபட்டினத்தில் பெரும் செலவில் அமைக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு இந்த ஏவுதளத்தை தனியாருக்கு மொத்தமாக தாரைவார்க்க முடிவு செய்து அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி குலசேகரபட்டின ஏவுதளத்தின் உரிமை அரசிடம் மட்டுமே இருக்கும், ஆனால் நிர்வாகம், செயல்பாடு அதிகாரம் தனியாருக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குலசேகரபட்டின ஏவுதளத்தை மத்திய அரசின் உத்தரவின் பெயரில் இஸ்ரோ-வின் தீவிர கண்காணிப்பின் கீழ் சுமார் 986 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டு 2027ல் பயன்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. குலசேகரபட்டினம் ஈக்வேட்டார் அருகில் இருக்கும் காரணத்தால் குறைந்த எரிபொருள் செலவில் விண்ணில் ராக்கெட் ஏவ முடியும் என்பதாலும், சிறிய ராக்கெட்களுக்கும், தனியார் நிறுவன ராக்கெட்களுக்கும் என பிரத்யேகமாக குலசேகரபட்டின ஏவுதளத்தை உருவாக்கப்பட்டது.
இதற்காக மத்திய அரசு சுமார் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமானத்திற்கான அடிக்கல் பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 2024ல் துவங்கப்பட்டது. தற்போது கட்டுமானம் முழு வேகத்தில் நடைபெற்று வரும் வேளையில், இதுவரையில் இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவு தளத்திற்கான ஆப்ரேஷன்ஸ், ராக்கெட் மெயின்டெனன்ஸ் ஆகியவற்றுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் 3 ஹெலிக்காப்படர் நிறுத்தும் வரையில் பெரிய ஹெலிப்பேட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுதளத்தில் காற்றின் வேகத்தை குறைக்க ஏவுதளத்தை சுற்றி சுமார் 5 அடுக்கு மரக்கன்று நடவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏவுதளத்தின் மொத்த நிர்வாகம், ஆப்ரேஷன்ஸ் என அனைத்தும் தனியாருக்கு கொடுக்க என்ன காரணம்..?
இந்திய விண்வெளி துறையில் தனியாருக்கு மத்திய அரசு திறந்த பின்பு மூத்த அதிகாரிகள் அதிக சம்பளத்திற்காக தனியார் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். இதனால் தற்போது ISRO, மத்திய விண்வெளி துறையில் அதிகப்படியான ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.
சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி கடந்த 25 வருடத்தில் இல்லாத வகையில் அதிகப்படியான ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்து நடைமுறையில் இருக்கும் 20,269 பணியிடத்தில் சுமார் 5632 இடங்கள் ஆட்கள் இல்லாமல் காலியாக உள்ளது. இதன் மூலம் 2001-02 ஆண்டில் இருக்கும் ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கை தற்போது உள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கும் வேளையில் பெரும் திட்டங்களை செயல்படுத்துவதை விரும்பாத இஸ்ரோ இத்தகைய முடிவை எடுத்துள்ளது எனவும் கருத்து நிலவுகிறது.
சமீபத்தில் இஸ்ரோவின் முக்கிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் பணியாற்றிய 100க்கும் அதிகமான குரூப் ஏ விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இஸ்ரோவை விட்டு வெளியேறிய பலர் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளம், உயர் பதவிக்கு சென்றுள்ளனர்.
இதேவேளையில் மத்திய அரசு தனியார் விண்வெளி துறையில் உருவாகியுள்ள தீ அல்லது புரட்சிக்கு ஊக்கப்படுத்தும் வகையில் குலசேகரபட்டின ஏவுதளத்தை தனியாருக்கு கொடுக்க தயாராகி, விருப்ப விண்ணப்பத்தை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.

