
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் இன்று றிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து குறைந்தது 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் அதிர்வால் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளதுடன், தலைநகர் பொகொட்டா வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஐக்கிய அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், கொலம்பியாவின் புவியியல் மையத் தகவல்களின்படி, பொகொட்டாவிற்கு மேற்கே சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சோகோ பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 107 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

