இஸ்ரேலின் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.slbfe.lk மூலம் இணைய வழியில் பதிவு செய்துகொள்ள முடியும்.
உணவகத் துறைக்காக 4,000 விண்ணப்பதாரர்களைப் பதிவு செய்ய இன்று நண்பகல் 12.00 மணிக்கு இணையப் பதிவு திறக்கப்படும். இதற்கு 25 முதல் 40 வயதுக்குட்பட்ட, உணவகச் சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் நல்ல ஆங்கிலப் புலமை கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
புனரமைப்புத் துறை
மேலும், விண்ணப்பதாரர்கள் உடல் மற்றும் மனரீதியாகத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரியாத அல்லது அங்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பணிபுரியாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

புனரமைப்புத் துறைக்கான பதிவு நாளை பிற்பகல் 2.00 மணிக்குத் திறக்கப்படும். பூச்சு மற்றும் ஜிப்சம் பலகை வேலை, மின் பெட்டி நிறுவுதல் மற்றும் செங்கல் சுவர் கட்டுதல், தச்சு வேலை, பீங்கான் ஓடு (டைல்) பதித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சுமார் 3,000 பேர் வீதம் மொத்தம் 12,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இறுதித் தேர்வு
இதற்கு 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, 10 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

முன்னதாகக் கட்டுமானப் பணிகளுக்கான இறுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது எனப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் தொழில்முறைத் திறன்களை இஸ்ரேலியப் பிரதிநிதிகள் நேரடியாகப் பரிசோதித்துத் தேர்வு செய்வார்கள் என்பதால், உண்மையான அனுபவமும் தகுதியும் உள்ள துறைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு SLBFE கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

