நம்ம PF பணம் எல்லாம் இங்க தான் போகுதா? தனியார் நிறுவன ஊழியர்களே இந்த விஷயம் தெரியுமா?
இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய கூடிய கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு ஈபிஎஃப்ஓ அமைப்பின் கீழ் பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு மாதந்தோறும் அதில் பணம் வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில் நம் சம்பளத்தில் ஒரு பகுதியும் நாம் வேலை செய்யும் நிறுவனம் சார்பாகவும் பிஎஃப் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் வட்டி கொடுக்கிறது. நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணம் பல இடங்களில் முதலீடு செய்யப்பட்டு அதில் இருந்து வரும் பணம் தான் நமக்கு வட்டியாக தரப்படுகிறது. நம் பிஎஃப் பணம் எங்கே, எப்படி முதலீடு செய்யப்படுகிறது என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி. அது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஈபிஎஃப்ஓ அமைப்பு நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பாதுகாப்பான அதே சமயம் நல்ல லாபம் தரக்கூடிய இடங்களில்தான் முதலீடு செய்கிறது. இந்த முதலீடுகள், மத்திய நிதியமைச்சகம் அவ்வப்போது வெளியிடும் முதலீட்டு வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பலும் பிஎஃப் பணம் இரண்டு வகைகளில் முதலீடு செய்யப்படுகிறது.
பெருமளவிலான தொகை அரசு பத்திரங்கள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இது குறைந்த அபாயம் கொண்டது அதே வேளையில் நிலையான வருமானம் தரும் முதலீடாக உள்ளன.அடுத்ததாக மொத்த நிதியில் சுமார் 15% வரை பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கு நேரடியாக நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு பதில், BSE SENSEX மற்றும் NSE NIFTY-50 குறியீடுகளை பிரதிபலிக்கும் ETFகளில் முதலீடு செய்கிறார்கள்.
30 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் என்பதால் ஈபிஎஃப்ஓ இந்த நிதியை நிர்வகிக்க, அனுபவம் வாய்ந்த நிதி மேலாண்மை நிறுவனங்களையும் செபி பதிவும் பெற்ற மேலாளர்களையும் நியமித்துள்ளது. மேலும் பிஎஃப் பணத்தை எந்தெந்த இடங்களில் முதலீடு செய்வது என்பதை CBT தான் தீர்மானிக்கிறது.
பிஎஃப் அமைப்பு நேரடியாக எந்த தனிப்பட்ட நிறுவன பங்குகளிலும் முதலீடு செய்வதில்லை. ETFகள் வழியாக முதலீடு செய்வதால், இது பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களில் இருந்து ஓரளவு பாதுகாப்பாக இருக்கிறது. மேலும் பெரும்பாலான பணத்தை அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதால், உங்கள் வைப்பு நிதிக்கு நிலையான வட்டியும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
மத்திய அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு ஆண்டும் பிஎஃப் பண முதலீட்டு விவரங்கள் முறையாக தணிக்கை செய்யப்படுகின்றன. அந்த வகையில் நம் பிஎஃப் பணம் வெறும் சேமிப்பு மட்டுமல்ல, அரசு மற்றும் நிதி வல்லுநர்களால் கவனமாக நிர்வகிக்கப்படும் ஒரு முதலீடு. அதே வேளையில் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு சொத்தாக திகழ்கிறது. ஓய்வுகால பாதுகாப்பை தர வேண்டும் ,அவசர காலத்திற்காக பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்துவோர் இருப்பதால் எப்போதுமே கணிசமான பணம் இருக்கும் வகையிலும் , முதலுக்கு மோசம் போகதாக திட்டங்களிலும் தான் பிஎஃப் பணம் முதலீடு செய்யப்படுகிறது.

