தங்கம் விலை உயர்வை விடுங்க.. சர்க்கரை விலை உயர்வை கவனிச்சீங்களா? இனி sugar cut தான் ஒரே வழி..!!
இந்தியர்கள் அதிகமாக டீ, காஃபி குடிக்கும் வழக்கம் கொண்டவர்கள். ஒரு நாளைக்கு காலை மாலை என இரண்டு வேளையாவது டீ, காஃபி குடித்துவிடுகிறோம். இந்த டீ, காஃபிக்கு ருசியை தருவதே அதில் சேர்க்கப்படும் சர்க்கரை தான். ஆனால் சர்க்கரை விலை உயர்வை கேட்டால் இனி டீ, காஃபிக்கு சர்க்கரையே போட மாட்டீர்கள்.
இந்தியாவில் சர்க்கரை விலை கடந்த ஒரு மாதத்தில் சுமார் 10 சதவீதம் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. நாட்டில் சர்க்கரை இருப்பு குறைந்திருப்பதும், வரவிருக்கும் பண்டிகை கால தேவையுமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவின் முக்கிய வணிக மையமான கோலாப்பூரில், சர்க்கரையின் மொத்த விற்பனை விலை 10.2 சதவீதம் உயர்ந்து, 100 கிலோவிற்கு 4,716 ரூபாயாக வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்கள் சர்க்கரைக்கு அதிக தேவை இருக்கும். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் இனிப்பு பலகாரங்கள் தேவையும் விற்பனையும் அதிகரிக்கும். எனவே இனி வரும் மாதங்களில் சர்க்கரை தேவை கணிசமாக உயரும்.
நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது. பண்டிகை கால தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது சந்தையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் புதிய சீசனின் போது, ஆலைகளிடம் சர்க்கரை இருப்பு சுமார் 3.5 மில்லியன் டன்களாக மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த அளவாகும்.
இதற்கிடையே சர்க்கரை விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. மேலும் பதுக்கலை தடுக்க, டீலர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை அரசு ஜூலை மாதமே விதித்தது. இந்த விதிமுறைகள் நவம்பர் 30, 2026 வரை அமலில் இருக்கும். அதாவது டீலர்கள் 4,000 குவிண்டால்களுக்கு மேல் சர்க்கரை இருப்பு வைக்கக்கூடாது என்றும், இருப்பை 30 நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கை விட அதிகமாக இருந்த நிலையில், இந்த சர்க்கரை விலை உயர்வு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நவம்பர் மாதம் புதிய பருவத்திற்கான சர்க்கரை வரத்து வரும் வரை, விலை குறைய வாய்ப்பில்லை என வணிகர்கள் ராயட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலம் நெருங்குவதால் இனிப்பு மற்றும் பலகாரங்கள் தயாரிப்பிற்கான தேவை அதிகரித்துள்ளதாலும், கையிருப்பு குறைந்துள்ளதாலும் சில்லறை விற்பனையிலும் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ சர்க்கரை கடந்த மாதம் 46 ரூபாயாக இருந்து இந்த மாதம் 53 ரூபாயாக உயர்ந்துள்ளது என சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வு சாதாரண நுகர்வோரை மட்டுமின்றி, இனிப்பு மற்றும் பேக்கரி தொழில் செய்பவர்களையும் பாதித்துள்ளது. சர்க்கரை விலை உயர்வால் இனிப்புகள், பிஸ்கட்கள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது.

