எவ்வாறாயினும், வைத்தியர் சேவையில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு அல்லது சேவையை விட்டு விலகி வௌிநாடுகளுக்குச் செல்பவர்கள் தொடர்பான தரவுகளை சுகாதார அமைச்சு பராமரிப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான 5 வருட காலப்பகுதியில், இலங்கையில் இருந்து மொத்தம் 3,791 விசேட வைத்தியர்கள் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி, நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலானோர் தமது மேற்படிப்புக்காகவே (Postgraduate studies) வௌிநாடு சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் துணையைப் பின்தொடர்ந்து செல்லுதல், மேலதிக கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக ஏனையோர் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் விளக்கமளித்தார்.
மேலும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 280 வைத்தியர்கள் வௌிநாடு செல்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
வைத்தியர்களின் இடம்பெயர்வு தொடர்பான மேலதிக விவரங்களை வழங்கிய பிரதி அமைச்சர், 2020ஆம் ஆண்டு முதல் 2026 ஜூன் வரையான காலப்பகுதியில் 1,429 வைத்தியர்களுக்கும், 140 விசேட வைத்தியர்களுக்கும் வௌிநாடு செல்வதற்காகச் சம்பளமற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வைத்தியர் சேவையில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு அல்லது சேவையை விட்டு விலகி வௌிநாடுகளுக்குச் செல்பவர்கள் தொடர்பான தரவுகளை சுகாதார அமைச்சு பராமரிப்பதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் வைத்தியர்கள் தங்கிப் பணியாற்றுவதற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதன் மூலம், அவர்களின் வெளிநாட்டு இடம்பெயர்வைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகள், போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் இதில் உள்ளடங்குவதுடன், இது தொடர்பான மேலதிக முன்மொழிவுகள் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.

