பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு எப்போது முதல் பயன்பாட்டுக்கு வருகிறது? ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு..!!
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன்படி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. அதே வேளையில் சில முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படுவதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்திய சஞ்சய் மல்ஹோத்ரா எப்போது முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்ற தகவலையும் வெளியிட்டார்.

இந்தியாவில் 2027-28 நிதியாண்டிற்குள் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டுவர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.
மக்கள் புழக்கத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பு, இந்தியாவின் தட்பவெப்பநிலை மற்றும் பயன்பாட்டு சூழலுக்கு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எவ்வாறு தாக்குப் பிடிக்கின்றன என்பதை சோதிப்பதற்காக கள பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் தந்துள்ளார்.
இந்தியாவில் முதலில் 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் தான் பிளாஸ்டிக் நோட்டுகளாக அறிமுகம் செய்யப்பட உள்ளன. முதல் கட்டமாக தலா 100 கோடி எண்ணிக்கையில் 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிடப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளன.
பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வரும் காகிதத்தால் ஆன ரூபாய் நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக காலம் உழைக்கக் கூடியவை. எளிதில் சேதமடையாது என்பதால் தான் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. போலியாக அச்சிடுவதை தடுக்ககூடிய அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக பிளாஸ்டிக் நோட்டுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
பிளாஸ்டிக் நோட்டுகள் பயன்பாட்டில் வர இருப்பதால் தற்போதுள்ள காகித நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுமா என்ற சந்தேகம் எழும் நிலையில் ஏற்கனவே உள்ள காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என அரசு கூறியுள்ளது.எனவே அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக பிளாஸ்டிக் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. வங்கிகள் வாயிலாக இவை படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிடுவதற்கான டெண்டர் விடுத்த ரிசர்வ் வங்கி, இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். சீனா அல்லது பாகிஸ்தானில் தங்களுக்கு தொழில்முறை செயல்பாடுகள் இருந்தால், அவற்றை இந்திய ஒப்பந்தத்திலிருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்த வேண்டும், இந்த ஒப்பந்தத்திற்காக தேவைப்படும் மூலப்பொருட்களை அந்த இரு நாடுகளிலிருந்தும் கொள்முதல் செய்யக் கூடாது என நிபந்தனை விதித்தது.
