International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. மோஷின் நக்வி மறைமுகமாக ஷெபாஸ் ஷெரீப் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கிடையே தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருடன் சேர்ந்து ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். பாகிஸ்தானில் தற்போது பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்தியாவசிய வசதிகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று போராடி வருகின்றனர்.

இதில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு தானே சுதந்திரம் அறிவித்து கொண்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராடும் மக்கள் போலீஸ் மற்றும் ராணுவத்தில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த பெருங்குழப்பத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராக இருப்பவர் மோஷின் நக்வி. இவர் சமீபகாலமாக கூறி வரும் கருத்துகள் தற்போது பாகிஸ்தானை அதிர வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ உள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளன. இதற்கிடையே தான் தற்போது அவர் கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. இதுதொடர்பாக மோஷின் நக்வி கூறியதாவது: ”பாகிஸ்தான் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அரசு இயந்திரத்தில் பல முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய ஒவ்வொரு நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 21 ஆண்டுகளாக லஞ்ச பணம் கைமாறியுள்ளது. பலர் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்துள்ளனர்.
மோஷின் நக்வி இப்படியான கருத்துகளை கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த வாரம் பாகிஸ்தான் உச்சி மாநாடு நடந்தது. இதில் , ”பாகிஸ்தானின் நிர்வாக அமைப்பு முழுமையாக சரிந்துவிட்டது” என்று கூறியிருந்தார். இது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீதான மறைமுகமாக விமர்சனமாக பார்க்கப்பட்டது. இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் தற்போது இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இந்த மோஷின் நக்வி உள்துறை அமைச்சர் என்பது மட்டுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் உள்ளார். , பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருடன் மிகவும் நெருக்கமானவர். இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மோஷின் நக்வி அந்த நாட்டின் ராணுவம் பற்றி எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. முழுக்க முழுக்க அரசியல்வாதிகள், அதிகார பதவிகளில் இருப்பவரை நோக்கி மட்டுமே குற்றம்சாட்டி உள்ளார்.
இதுபற்றி புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் சார்ந்த ஆய்வாளரான சந்தீப் உன்னிதன் கூறுகையில், ”பாகிஸ்தானில் ஊடகத் துறை அதிபராக இருந்து அந்த நாட்டின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக விரைவாக மாறியவர் தான் மோஷின் நக்வி. இவருக்கு நீண்டகாலமாக பாகிஸ்தான் பிரதமராக மாற வேண்டும் என்ற ஆசை உள்ளது. இவருக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் ஆதரவு அதிகளவில் உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் அசீம் முனீர், மோஷின் நக்வி ஆகியோர் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இதுதான் இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுததி உள்ளது. இதனால் தான் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதலின் போது பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனை அசீம் முனீர் – மோஷின் நக்வி ஆகியோர் சேர்ந்து செய்தனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து செயல்படுவது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சிக்கு ஆபத்தாக கூட மாறலாம்.
ஏனென்றால் அசீம் முனீர் பாகிஸ்தானில் ராணுவத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இது ஷெபாஸ் ஷெரீப்புக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. மோஷின் நக்வியை , அசீம் முனீர் முன்னிறுத்துவது என்பது ஷெபாஸ் ஷெரீப் பதவிக்கு சிக்கலை தரலாம்” என்றார். இதனால் பாகிஸ்தானில் நிலவும் உள்நாட்டு குழப்பத்தை பயன்படுததி ராணுவ தளபதி அசீம் முனீர் – உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி ஆகியோர் சேர்ந்து தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்க்க உள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

