ஐடி துறையின் ஆட்டம் ஆரம்பம்.. சென்னை, கோவை சிறப்பான முன்னேற்றம்.. ஜூலை மாதம் நடந்த முக்கிய விஷயம்!
ஏஐ, செமிகண்டக்டர் சிப் துறை மீதான முதலீடு குறைந்திருக்கும் வேளையில், ஏஐ தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமாயின் ஐடி சேவை துறை தான் முக்கிய ஆயுதம் என்ற நிலை டெக் துறையில் உருவாகியுள்ளது.
இதனால் கடந்த ஒரு மாத காலமாக ஐடி பங்குகள் உயர துவங்கியுள்ளது, இதன் விளைவாக இந்திய ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்ட நாளில் இருந்து இந்திய ஐடி சேவை துறையில் ஊழியர்கள் பணியமர்த்தலும், ஊழியர்கள் எண்ணிக்கை உயர்வும் பெரிய அளவில் மந்தமாகியுள்ளது, ஆனால் இவை அனைத்தும் ஜூலை மாதம் மாறியுள்ளது தெரிய வந்துள்ளது.
நாக்ரி ஜாப்ஸ்பீக் இன்டெக்ஸ் தரவுகளின் படி ஜூன் மாதம் ஐடி சேவை துறையில் பணியமர்த்தல் 3 சதவீதம் வரையில் குறைந்திருந்த நிலையில், ஜூலை மாதம் 6 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் மொத்தமாக வொயிட் காலர் வேலைவாய்ப்புகள் என கணக்கிட்டால் ஜூலை மாதம் வெறும் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, இது ஜூன் மாதத்தின் 6 சதவீதத்தை ஒப்பிடுகையில் குறைவாகும்.
கார்ப்ரேட் வேலைவாய்ப்புகள் மொத்தமாக குறைவது ஏஐ, ஆட்டோமேஷன் மூலம் ஊழியர்களின் தேவை வேகமாக குறைந்து வருவது தெரிகிறது. இதேபோல் ஐடி துறையில் பதிவாகியுள்ள வளர்ச்சி இத்துறையில் புதிய வர்த்தக வளர்ச்சி காரணமாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது தெரிகிறது.
ஜூன் மாதத்தை போலவே ஜூலை மாதமும் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் தான் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் பதிவாகியுள்ளது. இத்துறையில் மட்டும் Hiring சுமார் 33 சதவீதமும் வளர்ச்சி பதிவானது. ஜூன் மாதத்தில் 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறை வளர்ச்சி பாதையில் இருக்கும் காரணத்தால் நாட்டில் பிரஷ்ஷர்ஸ்-களுக்கான வேலைவாய்ப்பு சந்தையும் வளர்ச்சி பாதையில் உள்ளது. ஜூலை மாதம் 6 சதவீத வளர்ச்சியை பிரஷ்ஷர்ஸ் பிரிவில் Hiring நடத்துள்ளது என நாக்ரி தெரிவித்துள்ளது.
மேலும் ஜூலை மாதத்தில் அதிக பணிஅமர்த்தப்பட்ட நகரங்கள் பட்டியலில் சென்னை 3வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா 17 சதவீத வளர்ச்சியும், ஹைதரபாத் 16 சதவீதமும், சென்னை 11 சதவீதமும், பெங்களூர் 8 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.
இதேபோல் 2ஆம் நிலை நகரங்களில் இந்தூர் 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இதை தொடர்ந்து கவுஹாத்தி 9 சதவீதமும், கோயம்புத்தூர் 7 சதவீதமும், ஜெய்பூர் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

