நாவலப்பிட்டி – பாலந்தொட்ட பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, வெள்ளநீரில் சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் சேற்றுடன் கூடிய வெள்ள நீர் திடீரென உயர்ந்து பேருந்தைச் சூழ்ந்து கொண்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு லொறி ஒன்றின் உதவியுடன் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டுப் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் அதிகளவில் சூழ்ந்திருந்ததால், பயணிகள் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மோசமடைந்து வரும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், நாவலப்பிட்டி இளைஞர்களின் இந்த விரைவான செயல்பாடும் துணிச்சலும் ஒரு பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


