Gold: செம டிவிஸ்ட்.. 60 நாட்களுக்கு பின்பு நகை கடைகளுக்கு திடீரென மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. ஏன்?
இந்திய மக்களின் முக்கிய முதலீட்டு கருவியாக விளங்கும் தங்கம் 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதம் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. ஒருப்பக்கம் ஈரான் போர், கச்சா எண்ணெய் விலையால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைய, உள்நாடு சந்தையில் இறக்குமதி வரி உயர்வு, ஆதிக் மாஸ் போன்ற காரணத்தால் நகை கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் ஜூன் 15ஆம் தேதிக்கு பின்பு இந்த நிலை மெல்லமெல்ல மாறி வருவதாக நகை கடைகள் தெரிவித்துள்ளது.
பொதுவாக இந்திய சந்தையில் போர், ரூபாய் மதிப்பு, டாலர் மதிப்பு என எதுவாக இருந்தாலும் தங்கம் விலை குறைந்தால் நகை கடைகளுக்கு கூட்டம் அள்ளும், ஆனால் இந்த ஆண்டு வரலாற்றை மாற்றி எழுதியாக வேண்டிய நிலை உருவானது.

ஜனவரி மாதத்தில் வரலாற்று உச்சத்தில் இருந்த தங்கம், வெள்ளி விலை பிப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்பு மலையின் உச்சியில் இருந்து கீழே தூக்கிப்போட்ட பந்து போல் சர்ர்ர் என சரிய துவங்கியது. இதனால் பல பெரும் பணக்காரர்கள், பெரும் முதலீட்டாளர்கள் தங்களுடைய கையிருப்பில் இருக்கும் கோடிக்கணக்கான தங்கத்தை விற்பனை செய்ய துவங்கினர்.
இப்படி விற்கும் போது தான் சந்தையில் சப்ளை அதிகமாகி குறைந்த விலையில் அட்சய திருதி பண்டிகையின் போது வர்த்தகம் சூடுப்பிடித்தது.
ஆனால் பண்டிகை காலம் முடிந்தது மீண்டும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் காணாமல் போனது. இதை தொடர்ந்து வட இந்தியாவில் முக்கியமான கடைப்பிடிக்கப்படும் ஆதிக் மாசம் வந்தது சுமார் 30 நாட்கள் வரும் இக்காலக்கட்டம் ஹிந்து காலாண்டரில் ஒவ்வொரு 32 மாதங்களுக்கு ஒரு கூடுதல் மாதமாக வரும். இந்த காலக்கட்டத்தில் மக்கள் ஆடம்பர பொருட்கள் குறிப்பாக தங்கத்தை வாங்க மாட்டார்கள், இதனால் நாட்டில் நகை உற்பத்தி, விற்பனை என இரண்டும் முடங்கியது.
ஜூன் 15 ஆம் தேதி ஆதிக் மாசம் முடிந்தது, இதேபோல் கடந்த 60 நாட்களில் தங்கம் விலை குறைந்து ஏறினாலும் தேக்க நிலையிலேயே உள்ளது. இதனால் ஜூன் 15ஆம் தேதிக்கு பின் மக்கள் மெல்ல மெல்ல நகை கடை பக்கம் திரும்ப துவங்கியுள்ளதாக ஜோஸ் அலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோஸ் அலுக்காஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பாலான நகை கடைகள் கடந்த 45 நாட்களில் வர்த்தக உயர்வை பதிவு செய்துள்ளதை ஒப்புக்கொண்டாலும், சந்தை நிபுணர்கள் ஈரான் போர் முடிவு தான் சந்தையின் நிரந்தர உயர்வு பாதையை தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளது. இதேவேளையில் தான் நகை கடை பங்குகளை மியூச்சுவல் பண்ட் அமைப்புகள் விற்பனை செய்வதற்கு தயாராகின.
இவை அனைத்தும் தங்க நகை வாங்குவோருக்கு மட்டும் அல்லாமல் நகை கடை பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கும் மிகவும் முக்கியமான விஷயமாக விளங்குகிறது.
இன்றும் சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 4100 டாலர் அளவை தாண்ட முடியமால் தவித்து வருகிறது, இன்றைய வர்த்தகத்தில் 0.16 சதவீதம் உயர்ந்து 4049.55 டாலருக்கு வர்த்தகமாகிறது. தங்கம் விலை அதன் உச்ச விலையில் இருந்து கணக்கிடும் போது சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை ரீடைல் சந்தையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 30 ரூபாய் அதிகரித்து 13,250 ரூபாயாக உள்ளது.

