International
oi-Halley Karthik
லண்டன்: பிரிட்டன் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாதாரண காலங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்றும், பேரழிவுக்கான அறிகுறியாக இது இருக்கலாம் எனவும் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.
பிரிட்டன் அடிப்படையில் குளிர் பிரதேசமாகும். வெயில் காலங்களில் 25 டிகிரிக்கு மேல் வெயில் இருக்காது. ஆனால் இந்த ஆண்டு வெயில் 34 டிகிரியை தொட்டிருக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த புதன்கிழமை பிரிட்டனில் பரவலாக 35.2 டிகிரி வரை வெயில் பதிவாகியிருக்கிறது.

வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, பிரிட்டன் கடற்கரையில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. இந்த ஜல்லி மீன்கள் பார்ப்பதற்கு ஏலியன்கள் மாதிரி இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த வகை மீன்கள் ‘வெலெல்லா வெலெல்லா’ என அழைக்கப்படுகின்றன. கடல் பட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
வடமேற்கு பிரிட்டனின் கும்பிரியா பகுதியில் உள்ள செயின்ட் பீஸ் பீச் மற்றும் வேல்ஸ் பீச்சில் தற்போது இவை அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கின்றன. டார்க் ப்ளூ கலரில் இருப்பதால் மக்கள் கிட்ட நெருங்கவே பயப்படுகின்றனர்.
பார்ப்பதற்கு ஜல்லி மீன்கள் போன்று இருந்தாலும், இது ஜல்லி மீன்கள் கிடையாது. ஒருவகை சிறிய உயிரினம். இது மேன் ஓ வார் என்கிற ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது. எனவே இவற்றை தொட கூடாது. மீறி தொட்டால் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படும். இந்த வகை உயிரினங்களால் நீந்த முடியாது. கடலின் அலைக்கு ஏற்ப நகர்ந்து செல்லும். தற்போது இதன் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கலாம்.
ஆனால், இந்தியா போன்ற வெப்பமண்டல கடல் பகுதிகளில்தான் இது அதிகமாக இருக்கும். பிரிட்டன் போன்ற குளிர் பிரதேச கடல் பகுதியில் இவைகள் கரை ஒதுங்கியிருப்பது சூழலியல் எச்சரிக்கையாக பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
ஆனால் உள்ளூர் மக்கள், இந்த விஷயத்தை சீரியஸாக பார்க்கின்றனர். இந்த வகை மீன்கள் கரை ஒதுங்குவதை இப்போதுதான் முதல் முறை பார்ப்பதாகவும், இதற்கு பின்னால் பேரழிவுக்கான எச்சரிக்கை இருப்பதாகவும் கூறுகின்றனர்.

