LPG கேஸ் சிலிண்டர்: இன்னும் 2 வாரம் தான் கெடு.. இத முடிக்கலனா சிலிண்டர் கிடைக்காது..!!
இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் வீட்டு சமையலுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை தான் பயன்படுத்துகின்றன. உஜ்வாலா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் எல்பிஜி சிலிண்டர்களை நாட்டின் கடை கோடி கிராமங்கள் வரை கொண்டு சேர்த்துள்ளன.
ஈரான் போர் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து அரசு தரப்பில் சிலிண்டர் பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரும், தங்கள் ஆதார் எண்ணை கேஸ் இணைப்புடன் இணைக்கும் இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை விரைவாக முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி இணைப்புகளை நீக்கவும் சரியான பயனர்களுக்கே சிலிண்டர் சென்று சேர்கிறது என்பதை உறுதிப்படுத்தவும் கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலிண்டர் டெலிவரி செய்யும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு இ-கேஒய்சி முடிக்க வேண்டும் என தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் வாயிலாக மெசேஜ் அனுப்பி வருகின்றன.
சமையல் கேஸ் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், போலி இணைப்புகளை கண்டறிந்து நீக்கவும் இந்த ஆதார் இ-கேஒய்சி அவசியம் என்கிறது மத்திய அரசு. ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தான் இ-கேஒய்சி முடிக்க காலக்கெடு. ஒருவேளை இந்த தேதிக்குள் தங்களின் ஆதார் இ-கேஒய்சியைப் புதுப்பிக்க தவறும் நுகர்வோருக்கு, சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். சிலருக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது.
தொடர்ந்து எந்த தடங்கலும் இல்லாமல் எல்பிஜி சிலிண்டரை பெற இ-கேஒய்சி செயல்முறையை முடிப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் இ-கேஒய்சியை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளில் எளிதாக செய்து முடிக்கலாம். நீங்கள் சிலிண்டர் வாங்கும் எண்ணெய் நிறுவனங்களின் (IOCL, BPCL, HPCL) அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது செயலியில் லாகின் செய்து ஆதார் இ-கேஒய்சி என்பதை கிளிக் செய்து ஆதார் எண், ஓடிபி உள்ளிட்டவற்றை கொடுத்து இ-கேஒய்சி முடிக்கலாம்.
இல்லையெனில் உங்கள் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சிக்கு நேரில் சென்று, பயோமெட்ரிக் முறைப்படி அல்லது தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இ-கேஒய்சியை செய்து முடிக்கலாம். இவ்வாறு செல்லும் போது கேஸ் புக், ஆதார் அட்டை ஆகியவை நுகர்வோர் கொண்டு செல்ல வேண்டும்.
கேஸ் ஏஜேன்சியில் இ-கேஒய்சி முடிக்க கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை , இலவசமாகவே செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 15 வரை நாள் இருக்கிறதே என தள்ளி போடாமல் உடனே இந்த வேலையை முடிப்பது இறுதி நேர பதற்றங்களை தவிர்க்க உதவும்.

