மகாவலி கங்கையை ஒட்டிய உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (03) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ள இந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு, நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாவலி கங்கையை ஒட்டிய உடுநுவர, உடபலாத, யடிநுவர, கங்கஇஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்கவட கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழையுடனும், மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாலும், மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர பகுதிகளும் தாழ்வான நிலப்பரப்புகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பயணிகள் தேவையற்ற ஆற்றங்கரைச் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும், வெள்ளநீர் புகும் அபாயம் உள்ள இடங்களில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லத் தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அவசர நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்படுமாறும், வெள்ள அபாயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதால், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு, உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



