குஜராத்தின் சூரத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆமதாபாத்திற்கு, ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் மூலம் மனித இதயம் முதன்முறையாக எடுத்துச் செல்லப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள சூரத் அரசு சிவில் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் இதயம் சமீபத்தில் தானமாகப் பெறப்பட்டது. இதை, 250 கிலோமீட்டர் தொலைவில் ஆமதாபாதில் உள்ள யு. என். மேத்தா இதய நோய் ஆராய்ச்சி மையத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மற்றொரு நபருக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதனை ஆரம்பத்தில் விமானம் மூலம் எடுத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர். எனினும், குஜராத்தில் பெய்த கனமழையால் மோசமான வானிலை நிலவியதால் விமானச் சேவை முற்றிலும் முடங்கியது. இதனால், சூரத்தில் இருந்து ஆமதாபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலில் அந்த இதயத்தை எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டது.
இதற்காக, சூரத் ரயில் நிலையத்தில் இருந்து ஆமதாபாத்திற்கு 20901 என்ற எண் கொண்ட வந்தே பாரத் ரயிலில், சிறப்பு மருத்துவக் குழுவினருடன் மனித இதயம் பாதுகாப்புடன் வௌ்ளிக்கிழமை (31) காலை 9:18 மணிக்குப் புறப்பட்டது. இரு நகரங்களுக்கும் இடையிலான 250 கிலோமீட்டர் தூரத்தை எங்குமே நிற்காமல் கடந்து சென்ற இந்த ரயில், காலை 11:40 மணிக்கு ஆமதாபாத் வந்துசேர்ந்தது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக எடுத்துச் செல்லப்பட்ட இதயம், அடுத்த 15 நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தது. தொடர்ந்து நோயாளிக்கு உடனடி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. வானிலைத் தடையை மீறி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்ட உதவிய அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


