
பாறுக் ஷிஹான்
இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப்பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடத்திய உள் தணிக்கையின் (Internal Audit) போதே இந்த நிதி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைக்கும் வருமானப் பணம், அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் வைப்பிலிடப்பட வேண்டும். எனினும், குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வந்த பணத்தைச் சந்தேகநபரான பெண் பொலிஸ் அதிகாரி உத்தியோகபூர்வ கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளமை தணிக்கை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் மேற்பார்வையில், உதவிப் பொலிஸ் அதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் வழிகாட்டலில் இந்தைக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் அதிகாரி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

