Last Updated:
தொழிற்துறை, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இந்த விமான நிலையம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஆந்திராவின் உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படும் விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
இந்த விமான நிலையம் முதற்கட்டமாக ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளைக் கையாளும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதன் கொள்ளளவை ஆண்டுக்கு 4 கோடி பயணிகளாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள், கட்டிடம் தகவல் மாதிரியாக்கம் (BIM), ஏர்ஸைடு 4.0 தொழில்நுட்பம், பயோமெட்ரிக் பயணியர் செயலாக்கம் மற்றும் முன்கணிப்பு செயல்பாட்டு மையங்கள் (APOC) போன்ற அதிநவீன வசதிகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் கூரை வடிவமைப்பு ஆந்திராவின் பாரம்பரிய ‘சுட்டிலு’ குடிசைகள், அரக்கு பள்ளத்தாக்கின் இயற்கை எழில் மற்றும் பறக்கும் மீன்களின் வடிவத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஆந்திர ஆளுநர் எஸ். அப்துல் நசீர், முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது 13,500-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் மற்றும் மாணவிகள் ‘திம்சா’ (Dhimsa) நடனமாடி பிரதமரை வரவேற்றனர்.
விமான நிலையத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, ஆந்திராவில் சுமார் ரூ. 18,000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டிற்கு அர்ப்பணித்தார். விசாகப்பட்டினத்தில் தென்கொரிய நிறுவனத்தின் பார்ட்னர்ஷிப்புடன் ரூ. 460 கோடியில் ‘ASIP செமிகண்டக்டர்’ உற்பத்தி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது ஆண்டுக்கு 9.6 கோடி சிப்புகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இதேபோன்று கர்நூல்-4 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மண்டல திட்டத்திற்காக ரூ. 5,550 கோடி மதிப்பிலான மின் விநியோகக் கட்டமைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேபோன்று ரூ. 1,880 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் புதிய உயர்மட்டப் பாலங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
வட ஆந்திரப் பகுதியின் தொழிற்துறை, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இந்த அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.


