Tamilnadu
oi-Vishnupriya R
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே லாரி டிரைவரிடம் அதிகாரி போல லஞ்சம் வசூலித்த நபரை வடமாநில டிரைவர் ஒருவர் துரத்தி துரத்தி வீடியோ எடுத்ததால் அவர் பணத்தை போட்டுவிட்டு தலைத்தெறிக்க ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடி வழியாக தினமும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் இல்லாத நேரத்தை நோட்டமிடும் சில தனிநபர்கள், அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லாரி ஓட்டுநர்களை வழிமறித்து அதிகாரிகள் போல நடித்து பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே வடமாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரிடம் தனிநபர் ஒருவர் பணம் வசூலிக்கும் காட்சியை, அந்த ஓட்டுநரே வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பணம் வசூலித்த நபரை லாரி ஓட்டுநர் இந்தியில் திருடன், திருடன் என கத்திக் கொண்டு துரத்திச் செல்வதும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த நபர் ஆளைவிடுடா சாமி என சொல்லாத குறையாக காசை வீசிவிட்டு தப்பியோடினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டி எளாவூர் போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3.54 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுகல் செய்யப்பட்டன.
எளாவூர் சோதனை சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பக லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் சென்றது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலையில் அந்த சோதனை சாவடியில் சோதனை செய்தனர்.
அப்போது சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ 3.54 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இந்த பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது.
அது போல் கடந்த ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் லாரிகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை குறி வைத்து சீருடை அணிந்த மர்ம நபர் அதிகார் போல் செயல்பட்டு டிரைவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்தாராம்.
இந்த நிலையில் வழக்கம் போல் லாரி டிரைவரை ரூ 2000 கேட்டு மிரட்டிய நிலையில், அந்த நபரிடம் அடையாள அட்டையை டிரைவர் கேட்ட போது, அந்த மர்மநபர் தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
உடனே சுதாரித்த டிரைவர், “திருடன், திருடன்” சப்தமிட்டதை அடுத்து அங்கிருந்த சக ஓட்டுநர்களும் பொதுமக்களும் சேர்ந்து அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் போலி அதிகாரியாக வலம் வந்து பலரிடம் மிரட்டி பணம் கேட்டது தெரியவந்தது.



